"ஜாதி".. கையெழுத்து போடு.. சிதம்பரம் கோவில் கனகசபை சர்ச்சை.. பெண் பக்தருக்கு மிரட்டல்? பரபர புகார்!
கடலூர்: சிதம்பரம் நடராசர் கோயிலில் கனகசபை மீது ஏறி வழிப்பட்டதற்காக பெண் பக்தரை சாதி பெயர் சொல்லி திட்டியதாக 20 தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து இந்த சர்ச்சை பெரியதாக வெடித்த நிலையில் கனகசபை மீது ஏறி வழிப்படுவதற்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
தற்போது இதனையடுத்து, இந்த வழக்கில் முகாந்திரம் இல்லையென்று கூறி வழக்கை ரத்து செய்ய கையெழுத்து கேட்டு தன்னை மிரட்டுவதாக பெண் பக்தர் காவலர்கள் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
நான் ரெடி.. நீங்க ரெடியா.. வான்டடாக வந்து வண்டியில் ஏறும் ஆர்.பி.உதயகுமார்.. அமைச்சருக்கு சவால்
புகார்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேடை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பெண் ஒருவரை தீட்சிதர் கனகசபை மேடைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் மற்ற தீட்சிதர்கள் அதனை தடுத்துள்ளனர். அப்போது ஏற்பட்ட சர்ச்சையில் அப்பெண்ணை சாதி பெயர் சொல்லி தீட்சிதர்கள் திட்டியதாக அப்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் 20 தீட்சிதர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விசாரணை
இது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு தீட்சிதர்கள் தனியாக பணம் வசூலிப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு விசாரணை செய்தது. பின்னர், கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்றும் அறிவித்தது. இது குறித்து அரசாணையை கடந்த மே மாதம் வெளியிட்டது. இந்நிலையில் பெண் பக்தர் அளித்த புகாரின் பேரில் விசாரணையும் ஒரு பக்கம் நடந்து வந்துகொண்டிருந்தது.
மிரட்டல்
இப்படியான சூழலில், இந்த குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லையென்றும், எனவே வழக்கை ரத்து செய்ய கையெழுத்து போட வேண்டும் எனவும் காவல்துறையினர் தொடர்ந்து தன்னை மிரட்டி வருவதாக பெண் பக்தர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெண் பக்தர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர், "ஒரு பெண் காவலர் உட்பட 8 காவலர்கள் என் வீடு தேடி வந்து என்னை மிரட்டினார்கள்.
வாபஸ்
இந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை. எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் கையெழுத்திட வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். நான் மறுப்பு தெரிவித்தேன். ஆனால் அதை ஏற்காத அவர்கள், தீட்சிதர்கள்தான் அவ்வாறு உங்களை கூறவில்லை என்று சொல்கிறார்களே எனவே கையெழுத்து போடுங்கள் என மீண்டும் மிரட்டினார்கள். நான் கையெழுத்திட மறுத்து 'தப்பு பண்ணவங்க என்னைக்கு உண்மையை சொல்லியிருக்காங்க? நீங்க அவங்க மீது ஆக்ஷன் எடுங்க' அப்படின்னு சொன்னேன்.
தலையீடு
ஆனால், நான் சொன்னதை கேட்காத போலீஸ்காரங்க என்னையே புடுச்சு உள்ள போட்டுடுவேனு மிரட்டினாங்க. எனவே இந்த விவகாரத்துல இந்து சமய அறநிலையத்துறை தலையீடு செய்யனும்." என்று பெண் பக்தர் ஜெயஷீலா கூறியுள்ளார். கனகசபை மீதேறியதற்காக பெண் பக்தரை சாதி பெயரை சொல்லி திட்டியதும், வழக்கை வாபஸ் பெற காவல்துறையினர் வலியுறுத்தியதாக பக்தர் புகார் அளித்ததுள்ளதும் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.