சிதம்பரத்தில் பஸ் கண்ணாடியை உடைத்த பாமகவினர்.. ஸ்டாலினுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பதற்றம் - கைது
கடலூர்: பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் பற்றி முதல்வர் ஸ்டாலின் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஸ்டாலினுக்கு எதிராக தமிழகம் முழுவதும் இன்று பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் சூழலில் சிதம்பரத்தில் தனியார் பஸ்சின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனால் பதற்றம் ஏற்பட்ட நிலையில் பாமகவினர் 200 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நம் நாட்டின் மிகப்பெரும் பணக்காரராக இருப்பவர் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி. இவர் மீது அமெரிக்கா நீதிமன்றத்தில் பரபரப்பான குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. சூரிய மின் சக்தி ஒப்பந்தங்களுக்காக அதானி நம் நாட்டின் மின்வாரிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், அதனை மறைத்து அமெரிக்காவில் முதலீடுகளை ஈர்த்ததகாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த குற்றச்சாட்டில் ஆந்திரா, தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகி உள்ளது. இதற்கிடையே தான் அதானியை தமிழக முதல்வர் ஸ்டாலின் ரகசியமாக சந்தித்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி இருந்தார்.
இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஜூலை மாதம் 10 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ரகசியமாக சந்தித்து பேசியிருக்கிறார். இந்த ரகசிய சந்திப்பின் நோக்கம் என்ன? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் எந்த பதிலும் அளிக்கவில்லை.
இதுபற்றி நேற்று முதல்வர் ஸ்டாலினிடம் பத்திரிகையாளர் நேரடியாக கேள்வி கேட்டார். அதற்கு, "ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொணடிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை." என சொல்லிவிட்டு நகர்ந்தார். முதல்வர் ஸ்டாலினின் இந்த பதிலுக்கு பாமகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ராமாதாஸை முதல்வர் ஸ்டாலின் அவமானப்படுத்தி உள்ளார். ராமாதாஸிடம் முதல்வர் ஸ்டாலின் வருத்தம் அல்லது மன்னிப்பு கோர வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து இருந்தார். மேலும் முதல்வர் ஸ்டாலினை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பூர் உள்பட பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த பாமகவினர் போலீசாரிடம் அனுமதி கோரினர். ஆனால் போலீசார் அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, பாமக மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் தலைமையில் ஏராளமான பாமகவினர் குவிந்தனர்.
மேலும் அவர்கள் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று அந்த பகுதியில் வந்த தனியார் பஸ்சின் கண்ணாடி உடைக்கப்பட்டது. பஸ்சின் ஜன்னல் கண்ணாடியை கையால் குத்தி பாமகவினர் உடைத்துள்ளனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் உடனடியாக சுதாரித்து கொண்டு அங்கு குவிந்த பாமகவினர் 200 பேரை அதிரடியாக கைது செய்தனர். அதன்பிறகு அவர்கள் அனைவரும் தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த போராட்டத்தால் சிதம்பரம் காந்தி சிலை அருகே பரபரப்பான சூழல் உருவானது. இதனால் அசம்பாவித சம்பங்கள் நடக்காமல் தடுக்க 500க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications