அந்த 3 பேரும் என் முன்னாடி வந்து நிக்கட்டும்! என்ன வேணும்னு கேட்கட்டும்.. கடலூரில் கர்ஜித்த ராமதாஸ்
கடலூர்: மும்மூர்த்தி கடவுள் வந்து என்னிடம் வரம் கேட்டால் ஒரு சொட்டு மது இல்லாத தமிழ்நாடு வேண்டும் என கேட்பேன் என பாமக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பச்சையாங்குப்பத்தில் பாமக சார்பில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், ஜி.கே. மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ராமதாஸ் பேசுகையில் மாணவர்களை விட மாணவிகளே நன்றாக படிக்கிறார்கள்.

விழுப்புரம் அருகே ஒரு கிராமத்தில் பள்ளிக்கு பக்கத்திலேயே டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. அங்கு குடித்துவிட்டு பள்ளியில் வாத்தியாரையே மாணவர்கள் அடித்த சம்பவம் எல்லாம் நடந்திருக்கு. பள்ளியையும் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள்.
இதை ஒழிக்கவே நாளும் போராடி வருகிறோம். மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் என் எதிரே வந்து "ராமதாஸ் உனக்கு என்ன வேணும்னு " என் கிட்ட கேட்டால் நான் என்ன வரம் கேட்பேன் தெரியுமா, ஒரு சொட்டு மது, சாராயம் இல்லாத தமிழகம் வேண்டும் என கேட்பேன். அது போல் ஒரு சொட்டு மழை நீர் கூட கடலில் போய் கலக்கக் கூடாது என வரம் கேட்பேன்.
இந்த ஊருக்கும் அந்த ஊருக்கும் சண்டை ! எங்க ஊர்ல பெய்யும் மழை உங்க ஊருக்கு எப்படி வரும், எங்க ஊர் மழை எங்க ஊர்லேயே தங்க வேண்டும். இப்படித்தான் பாமகவின் கொள்கை உள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் இலவச மருத்துவ உதவி வழங்க வேண்டும். ஒரு பைபாஸ் சர்ஜரி செய்ய ரூ 10 லட்சம் தேவைப்படுகிறது. ஏழைகள் அந்த பணத்திற்கு எங்கே போவார்கள்.
அந்த ரூ 10 லட்சத்தை அரசே கொடுக்க வேண்டும் என்பதுதான் பாமகவின் கொள்கை. இவ்வாறு ராமதாஸ் பேசினார். பாமகவின் வாக்கு வங்கியை அதிகரிக்க அக்கட்சி முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக பாமகவின் கொள்ளைகள், மக்களுக்கான நலத்திட்டங்கள், அன்புமணியின் சிறப்பான செயல்பாடுகள் குறித்து திண்ணை பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
அது போல் பாமக சார்பில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் நிழல் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதில் உள்ள திட்டங்கள் எல்லாமே பொதுமக்களுக்கு பயனிக்கக் கூடியதாகும். இந்த அறிக்கையை தாக்கல் செய்யும் ஒரே கட்சி பாமகதான். பாமக ஆட்சிக்கு வந்தால்இது போன்ற திட்டங்களை செயல்படுத்துவோம் என்றும் சொல்வதுடன் இதை அரசும் செயல்படுத்தினால் மக்கள் பயன்பெறுவர் என்பதையும் இவர்கள் நிழல் நிதி அறிக்கை காட்டுகிறது.
வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாமக ஆட்சி அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் பாமக தலைமையிலான கூட்டணியில் யார் வந்தாலும் வரவேற்போம் என தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications