பள்ளி செல்ல காத்திருந்த மாணவன் குத்திக் கொலை.. பட்டப்பகலில் பயங்கரம்.. என்ன காரணம்? அதிர்ந்த கடலூர்!
கடலூர்: கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பேருந்து நிறுத்தத்தில் பள்ளி செல்ல காத்திருந்த மாணவன் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே மேல்புளியங்குடி பேருந்து நிறுத்தத்தில் இன்று காலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்வதற்காக மாணவர்கள் பேருந்துக்காக காத்து நின்றனர். மேல்புளியங்குடியை சேர்ந்த ஜீவா என்ற பிளஸ் 2 மாணவரும் பள்ளிக்கு செல்வதற்காக பேருந்துக்கு காத்திருந்தார். இந்த நிலையில், பேருந்து நிறுத்தத்தில் ஜீவாவுக்கும், மற்றொரு நபருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் அந்த நபர் ஜீவாவை அருகே உள்ள ஓடை பகுதியில் பேசுவதற்காக அழைத்துச் சென்று கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். மின் வாரியத்தில் பணிபுரியும் ஆனந்த் என்பவர், பள்ளி மாணவன் ஜீவாவை கொலை செய்தது போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பேருந்து நிலையத்தில் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த ஆனந்த், ஜீவாவை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.
கத்தியால் குத்தப்பட்ட ஜீவா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் ஜீவாவை கொலை செய்துவிட்டு தப்பிய ஆனந்த் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் விவகாரம் காரணமாக ஜீவா கொலை செய்யப்பட்டாரா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி செல்லக் காத்திருந்த பிளஸ் 2 மாணவன் பட்டப்பகலில் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications