40-க்கு 40 ஜெயிச்சு என்ன பிரயோஜனம்? 2026 சட்டசபை தேர்தலில் மக்கள் என்ன செய்யணும்? தங்கர் பச்சான்
கடலூர்: தமிழகம், புதுவையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 40- க்கு 40 இடங்களில் வெற்றி பெற்ற திமுகவினரால் ஒன்றும் பயனில்லை என பாமக சார்பில் கடலூர் எம்பி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுவைக்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பாமக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து 10 இடங்களில் போட்டியிட்டது. இதில் கடலூர் தொகுதியில் போட்டியிட்டவர் தங்கர் பச்சான்.

இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் வென்றார். 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்ற தங்கர் பச்சான் 3ஆவது இடத்தை பிடித்தார். இந்த நிலையில் வாக்களித்த வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் பயணத்தை நேற்று பாமக சார்பில் தங்கர் பச்சான் மேற்கொண்டார்.
கடலூர் சாவடி பகுதியில் உள்ள பிடாரி அம்மன் ஆலயத்தில் நன்றி தெரிவிக்கும் பயணத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் மக்கள் வேட்பாளர்களை பார்த்து வாக்களிக்க வேண்டும். கட்சியையோ சின்னத்தையோ பார்த்து வாக்களிக்கக் கூடாது.
39 இடங்கள், 40 இடங்கள் என திமுகவும் அதிமுகவும் மாறி மாறி வென்று மக்களுக்கு செய்தது என்ன. கிடைக்கும் சிறிய அதிகாரங்களை கூட பாமக மக்களின் நலனுக்காக பயன்படுத்தியுள்ளது. நான் அரசியல்வாதி அல்ல. வென்றாலும் தோற்றாலும் மக்களுடனேயே இருப்பேன்.
மக்களை சார்ந்தே எனது நடவடிக்கைகள் இருக்கும். அடுத்து வரும் சட்டசபை தேர்தலிலாவது மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இவ்வாறு தங்கர்பச்சான் கேட்டுக் கொண்டார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பத்திரக்கோட்டையில் பிறந்தவர் தங்கர்பச்சான். விவசாய குடும்பத்தில் பிறந்தவர். தாய் தந்தைக்கு 9ஆவதாக பிறந்தவர்.
தங்கர் பச்சானின் தந்தை தெருக் கூத்துக் கலைஞராக இருந்தவர். பல்வேறு திரைப்படங்களில் தங்கர் பச்சான் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். அழகி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தங்கர் பச்சான் , 9 ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம், சொல்ல மறந்த கதை, அம்மாவின் கைப்பேசி, களவாடிய பொழுதுகள் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
பொதுவாக தமிழ் சினிமாவில் தென்தமிழகம், கொங்கு பகுதியையே மையமாக கொண்டு எடுக்கப்பட்ட நிலையில் வட தமிழக மக்களையும் அவர்களின் வாழ்வியலையும் மையப்படுத்தி திரைப்படங்களை எடுத்து வருகிறார் தங்கர் பச்சான். விவசாயத்திற்கு ஆதரவான தனது கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வரும் தங்கர் பச்சானை பாமக கடலூர் வேட்பாளராக களமிறக்கிய நிலையில் அந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெற்றது.
இவர் ஆரம்ப கால கட்டத்தில் இருந்தே பாமகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தவர். தமிழ் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் தங்கர்பச்சான், சீமான், ராமதாஸ், திருமாவளவன் உள்ளிட்டோர் தொடங்கிய அமைப்பிலும் தங்கர் பச்சான் தனது பங்களிப்பை ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications