கடலூர் அதிமுக பிரமுகர் கொலை பின்னணி.. ஆடு திருடும் கும்பலின் ‘பகீர்’ வாக்குமூலம்! அதிர்ந்த போலீசார்!
கடலூர்: கடலூரில் அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அளித்த வாக்குமூலம் போலீசாரையே அதிர வைத்துள்ளது.
கடலூர் முதுநகர் அருகே உள்ள வண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பநாதன் (45). அதிமுக மாவட்ட பிரதிநிதியான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். முன்பு அதிமுக சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராக இருந்துள்ளார். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் புஷ்பநாதன் நேற்று முன்தினம் இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்து வந்த கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்துள்ளனர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த புஷ்பநாதன் தனது பைக்கை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினார். ஆனால் அந்த கும்பல் விடாமல் துரத்திச் சென்று சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த புஷ்பநாதன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் கடலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடலூரில் அதிமுக நிர்வாகி புஷ்பநாதனை படுகொலை செய்தவர்களை துரிதமாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். கடலூர் டிஎஸ்பி பிரபு தலைமையில் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் அஜய் (21), நேதாஜி (23) மற்றும் சந்தோஷ் (24) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து புஷ்பநாதனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சென்னையில் பதுங்கியிருந்த அவர்கள் மூன்று பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் கொலை செய்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் அளித்துள்ள வாக்குமூலம் போலீசாரையே அதிர வைத்துள்ளது. அதாவது, கைது செய்யப்பட்ட மூவரும் முன்னாள் அதிமுக கவுன்சிலர் புஷ்பநாதனும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். புஷ்பநாதன் ஆடு விற்பனை தொழில் செய்து வந்துள்ளார். ஆடுகளை மலிவாக வாங்கி லாபம் பார்ப்பதற்காக, ஆடுகளை திருடி வந்து கொடுத்தால் பணம் தருவதாக அவர்களிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, அஜய், நேதாஜி, சந்தோஷ் ஆகிய 3 இளைஞர்களும் அப்பகுதியில் பலரது வீடுகளில் ஆடுகளை திருடி, புஷ்பநாதனிடம் விற்று வந்துள்ளனர். ஆனால், புஷ்பநாதன் உரிய பணத்தை கொடுக்காமல் மிக குறைவான பணத்தையே கொடுத்து வந்துள்ளார். சில சமயங்களில் பணம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
மேலும் திமுக பிரமுகர் ஒருவரின் வீட்டில் ஆடுகள் திருடும்போது அவர்கள் 3 பேரும் போலீசில் சிக்கிக் கொண்ட நிலையில், புஷ்பநாதன் அவர்களை ஜாமீனில் எடுக்கவில்லையாம். ஆடுகள் திருட பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்த நிலையில், தனது செல்வாக்கை கொண்டு அதனை விடுவிக்கவும் புஷ்பநாதன் முயற்சிக்கவில்லையாம். போதாக்குறைக்கு, இவர்கள் ஆடு திருடுவதாக பலரிடம் புஷ்பநாதன் கூறியதாகவும் அறிந்துள்ளனர்.
இதனால் புஷ்பநாதன் மீது தீராத ஆத்திரத்தில் இருந்த அவர்கள் மூவரும், புஷ்பநாதனை சரியான நேரம் பார்த்து தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளனர். அதன்படி, சனிக்கிழமை இரவு புஷ்பநாதன் தனது வீட்டுக்கு பைக்கில் வரும்போது அவரை வழிமறித்து கொலை செய்துள்ளனர்.
அதிமுக பிரமுகர் கொலையில் கைதானவர்களின் இந்த வாக்குமூலம் அதிர வைத்துள்ளது. கைதான மூன்று பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த விவகாரம் கடலூர் பகுதியில் பெரும் பேசுபொருளாகி உள்ளது.












Click it and Unblock the Notifications