ஹலோ மைக் டெஸ்டிங்.. ஹலோ.. வேலை செய்யாத மைக்! கோபத்துடன் வீசியெறிந்த திருமாவளவன்! பதறிய நிர்வாகிகள்!
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய விசிக தலைவர் திருமாவளவன், மைக் வேலை செய்யாததால் அதை ஆத்திரத்தில் தூக்கி வீசியெறிந்தார்.
இதனால் ஏற்பட்ட பரபரப்பால் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பதறிப்போனார்கள்.

எப்போதுமே பொதுவெளிகளில் முடிந்தவரை பொறுமையை கடைபிடிக்கக் கூடிய திருமாவளவன், நேற்று இந்தளவு கோபப்பட்டது அவரது கட்சியினரிடையே பேசு பொருளாக உள்ளது.
மே 17 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வீரவணக்கப் பொதுக்கூட்டம் விசிக சார்பில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது.
அதில் பங்கேற்று பேசிய திருமாவளவன், ஆரம்ப காலம் முதலே தமிழீழ விடுதலைக்காக அறப்போர் நடத்தி வரும் இயக்கம் விசிக என்றும் ராஜபக்சேவை பொறுத்தவரை இனப்படுகொலை செய்தவர் எனவும் ஆவேசம் காட்டினார்.
இதேபோல் தமிழ் ஈழ விடுதலை தொடர்பாக இன்னும் பல கருத்துக்களை மேடையில் முன் வைத்துக் கொண்டிருக்கும் போது, திருமாவளவன் பேசிய மைக் வேலை செய்யவில்லை.
இதையடுத்து அவருக்கு உடனடியாக மாற்று மைக் வழங்கப்பட்டது, துரதிர்ஷ்டவசமாக அந்த மைக்கும் வேலை செய்யவில்லை. மைக்செட் அமைப்பாளரை போல், ஹலோ மைக் டெஸ்டிங்.. ஹலோ.. என மைக்கை டெஸ்ட் செய்த திருமாவளவன் ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து டென்ஷன் ஆனார்.
வேலை செய்யாத மைக்கை தனது கையிலிருந்து திருமாவளவன் வீசியெறிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுவெளிகளில் சற்று கவனமாக நடக்கக்கூடிய திருமாவளவன் இந்தளவு கோபப்பட்டதற்கு என்ன காரணம் எனத் தெரியாமல் விசிக நிர்வாகிகள் தவித்தனர்.












Click it and Unblock the Notifications