தவளை இறந்து கிடந்த ஐஸ்கிரீமை சாப்பிட்ட குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அனுமதி.. மதுரை அருகே பரபரப்பு!
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் அருகே சிற்றுண்டியில் வாங்கிய ஐஸ்கிரீமில் இறந்த நிலையில் தவளை கிடந்துள்ளது. இந்த ஐஸ்கிரீமை சாப்பிட்ட 3 குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பீனிக்ஸ் நகர் பகுதியை சேர்ந்த தம்பதி சேதுபது - மீனாட்சி. இவர்களது மகன்கள் அன்புச்செல்வன், தமிழரசன். அன்புச்செல்வனுக்கு நித்யாஸ்ரீ, ரத்னஸ்ரீ என்ற இரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். இதேபோல் தமிழரசனுக்கு 3 வயதில் பெண்குழந்தை இருக்கிறாள்.
இந்த நிலையில் நேற்று தைப்பூச திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோவிலுக்கு அன்புச்செல்வம் குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர்.

ஐஸ்கிரீமில் தவளை
அப்போது அங்கு நேற்று காலை சாலையோரம் இருந்த சிற்றுண்டி கடையில் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்துள்ளனர். குழந்தைகள் அனைவரும் விரும்பி ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது நித்யாஸ்ரீ வைத்திருந்த ஐஸ்கிரீமில் இறந்த நிலையில் ஒரு தவளை இருந்துள்ளது. ஐஸ்கிரீமில் தவளை இருந்ததை பார்த்த நித்யாஸ்ரீ தனது தந்தை அன்புச்செல்வனிடம் காண்பித்துள்ளார்.

ஆஸ்பத்திரியில் அனுமதி
மகள் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஐஸ்கிரீமில் தவளை கிடப்பதை பார்த்த அன்புச்செல்வன் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து உடனடியாக குழந்தைகள் அனைவரையும் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு 3 குழந்தைகளுக்கும் உடனடியாக பரிசோதனை செய்யப்பட்டது. தவளை இறந்து கிடந்த ஐஸ்கிரீமை சாப்பிட்ட குழ்ந்தைகளுக்கு வாந்தி மற்றும் பேதி ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் விசாரணை
இந்த நிலையில், ஐஸ்கிரீமில் தவளை இறந்து கிடந்தது தொடர்பாக அவரது குடும்பத்தினர் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் பலரும் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீமில் தவளை இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீமில் தவளை இறந்து கிடந்த விவகாரம் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

அடிக்கடி ஆய்வு மேற்கொள்கின்றனரா?
உரிய உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை பின்பற்றி ஐஸ்கிரீம்களை தயாரிக்கும் சில உள்ளூர் நிறுவனங்கள் செயல்படுகின்றனவா? என்பது குறித்தும் இது பற்றி அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு மேற்கொள்கின்றனரா? என்பது தொடர்பாகவும் பல்வேறு கேள்விகளும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதேபோல், சாலையோரம் விற்கப்படும் உணவுப்பொருட்களின் தரம் மற்றும் அவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் பற்றியும் உரிய ஆய்வை நடத்தி இதுபோன்ற உணவு பண்டங்களின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications