உ.பி. பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் மாற்றம்? துணை முதல்வர் மவுரியா போர்க்கொடி? டெல்லியில் ஆலோசனை
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் பாஜகவில் உட்கட்சி மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தலைமையில் பாஜக எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனையடுத்து டெல்லி சென்ற துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து ஆலோசனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி 43 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக கூட்டணியோ 36 இடங்களில்தான் வென்றது. இது பாஜகவுக்கு மிகப் பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. பிரதமர் மோடியே தாம் போட்டியிட்ட உ.பி. வாரணாசி தொகுதியில் சில சுற்றுகளில் பின்னடைவை சந்தித்திருந்தார். இதனால் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது கடும் அதிருப்தி எழுந்தது.

இதனைத் தொடர்ந்து 7 மாநிலங்களின் 13 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இந்த தேர்தலிலும் பாஜகவுக்கு பெரும் தோல்விதான் கிடைத்தது.
இந்தப் பின்னணியில் உத்தரப்பிரதேசத்தில் 10 சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 10 தொகுதி இடைத்தேர்தல் என்பது உ.பி. பாஜகவுக்கு வாழ்வா? சாவா? என்கிற விவகாரமாக கருதப்படுகிறது. 10 தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் உ.பி. பாஜகவுக்குள் கலகக் குரல் வெடித்துள்ளது.
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தலைமையில் பாஜக எம்.எல்.ஏக்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கின்றனர். உ.பி. பாஜக மாநில கட்டமைப்பில் முழுமையான மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது கேசவ் பிரசாத் மவுரியா கோஷ்டியின் கோரிக்கை. மேலும் முதல்வர் பதவியில் இருந்து யோகி ஆதித்யநாத்தை மாற்ற வேண்டும் என்பதும் கேசவ் பிரசாத் மவுரியா கோஷ்டியின் வலியுறுத்தல்.
இந்த பின்னணியில் டெல்லி சென்ற கேசவ் பிரசாத் மவுரியா, பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து உ.பி. பாஜக நிலைமை குறித்து விவாதித்துள்ளார். இதேபோல உபி பாஜக தலைவர் பூபேந்திர சவுத்ரியும் ஜேபி நட்டாவை சந்தித்து பேசினார். இன்னொரு பக்கம் லக்னோவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தமது ஆதரவு அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனால் உ.பி. பாஜகவில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications