பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு.. லோக் சபாவில் மசோதா நிறைவேறியது
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்த மசோதாவை இன்று மத்திய பாஜக அரசு லோக் சபாவில் தாக்கல் செய்துள்ளது.
Recommended Video

டெல்லி: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்த மசோதா இன்று லோக்சபாவில் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 323 வாக்குகள் விழுந்தன. எதிராக 3 பேர் வாக்களித்தனர். அதிமுக வாக்கெடுப்புக்கு முன்பு வெளிநடப்பு செய்தது.
பெரும்பாலான எதிர்க்கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தன என்பது குறிப்பிடத்தக்கது. அதில் முக்கியமானது, காங்கிரஸ். சமாஜ்வாடி, டிஆர்எஸ், திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகியவையும் ஆதரவு தெரிவித்திருந்தன.
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க முடிவு எடுத்து இருப்பதாக நேற்று மத்திய அரசு அறிவித்தது. கையோடு மசோதாவையும் இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தது. இதுவரை நாடு முழுக்க 49.5 சதவிகித இடஒதுக்கீடு மட்டுமே கடைபிடிக்கப்பட்டு வருகிறது (தமிழகம் தவிர்த்து). இந்த நிலையில் கூடுதலாக 10 சதவிகித இட ஒதுக்கீட்டை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

உயர் சாதியினர்
முழுக்க முழுக்க உயர் சாதியினர், ஏற்கனவே நல்ல பணிகளில் இருக்கும் நபர்கள் மேலும் பயன்பெறும் வகையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. மொத்தம் 19 கோடி உயர் சாதியினர் இதனால் பலன் அடைவார்கள் என்று கூறப்படுகிறது. இது பொருளாதார ரீதியாக பின்தங்கி இருக்கும் பட்டியலின சாதியினருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

யாருக்கு எல்லாம்
பிராமணர்கள் மட்டுமல்லாமல், வட மாநிலங்களில் உயர் சாதியினராக இருக்கும் ஜாட், குஜ்ஜார்ஸ், பட்டிடார்ஸ், மாரத்தாஸ் தொடங்கி தென் மாநிலங்களில் இருக்கும் காப்பு, கம்மா ஜாதியினர் வரை எல்லோரும் பயன் பெறுவார்கள். அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் உயர் சாதியினர் இதற்கு ஆதரவாக குரல் கொடுத்து இருக்கிறார்கள்.

ஆனால் என்ன
இதுவரை நாடு முழுக்க 49.5 சதவிகித இடஒதுக்கீடு மட்டுமே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் சட்ட திருத்தம் மூலம் 69 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மண்டல் கமிஷனின் இந்த பரிந்துரைக்கு எதிராகத்தான் தற்போது மத்திய அரசு சட்ட திருத்தம் மூலம் கூடுதல் இடஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளது.

தாக்கல்
இந்த பின்னணியில் இன்று லோக்சபாவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கான 10% இடஒதுக்கீடு மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் மசோதாவை தாக்கல் செய்தார். மசோதா மீது கிட்டத்தட்ட 5 மணி நேரம் விவாதம் நடந்தது.

அதிமுக வெளிநடப்பு
விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுகவின் தம்பித்துரை இந்த மசோதாவை எதிர்த்துப் பேசினார். இது சமூக நீதிக்கு விரோதமானது என்று அவர் கூறினார். பின்னர் வாக்கெடுப்புக்கு முன்னதாக அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் வாக்கெடுப்பு நடைபெற்றது.

323 பேர் ஆதரவு
வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 323 பேர் வாக்களித்தனர். 3 பேர் எதிர்த்து ஓட்டுப் போட்டனர். இதைத் தொடர்ந்து மசோதா நிறைவேறியதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். வாக்கெடுப்பின்போது பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அவையில் இருந்தனர்.
நாளை இந்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications