ஜம்மு காஷ்மீரை தொடர்ந்து லடாக் தலைவர்களுடன் மத்திய அரசு ஆலோசனை- மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தல்
டெல்லி: லடாக் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுடன் டெல்லியில் மத்திய அரசு தற்போது ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த கூட்டத்தில் லடாக் யூனியன் பிரதேசத்துக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை லடாக் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு 2 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய பாஜக அரசால் ரத்து செய்யபட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர், லடாக் என்ற 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டன.

2 யூனியன் பிரதேசங்கள்
இதில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு சட்டசபையும் லடாக் யூனியன் பிரதேசத்துக்கு சட்டசபை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீரில் போராட்டங்கள் எதுவும் நடைபெறாத வகையில் கைது செய்யப்பட்ட பெரும்பாலான தலைவர்கள் ஓராண்டுக்குப் பின்னர் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீரை தொடர்ந்து லடாக் தலைவர்களுடன் மத்திய அரசு ஆலோசனை- மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தல்

மோடி ஆலோசனை
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அரசியல் நடவடிக்கைகளை தொடங்குவது தொடர்பாக அண்மையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா , மெகபூபா முப்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநில அந்தஸ்து கோரிக்கை
இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு தேர்தல் நடத்த தொகுதி மறுசீரமைப்பு முதலில் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் ஜம்மு காஷ்மீர் தலைவர்களோ, மாநில அந்தஸ்து வழங்கியாக வேண்டும் என வலியுறுத்தினர். மெகபூபா முப்தி மட்டும், சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றார்.

லடாக் தலைவர்களுடன் ஆலோசனை
இதனையடுத்து இன்று லடாக் யூனியன் பிரதேச தலைவர்கள் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். கார்கில் ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள 11 தலைவர்கள் டெல்லிக்கு வருகை தந்துள்ளனர். லடாக்- யூனியன் பிரதேசத்துக்கு தனிமாநில அந்தஸ்து, 370வது பிரிவு அமல்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை இந்த தலைவர்கள் வலியுறுத்த உள்ளனர்.












Click it and Unblock the Notifications