வட இந்தியாவை புரட்டிப் போட்ட பெருமழை வெள்ளம்- 110 பேர் பலி! தொடரும் ரெட் அலர்ட்!
டெல்லி: நாட்டின் வட இந்திய மாநிலங்களில் பருவமழை வெளுத்து வாங்கி புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. வட இந்திய மாநிலங்களில் மழை வெள்ளத்துக்கு மொத்தம் 110 பேர் பலியாகி உள்ளனர். இமாச்சல பிரதேசத்தில் மட்டும் 80 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, டெல்லி மாநிலங்கள் கொட்டும் கனமழையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் மாநிலங்களில் கனமழை, வெள்ளத்தால் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இம்மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் மட்டும் 80 பேர் மழைக்கு பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 92 பேர் படுகாயமடைந்துள்ளனர். இம் மாநிலத்தின் 41 இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பியாஸ் நதியில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
பஞ்சாப் மாநிலமும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இம்மாநிலத்தின் கக்கார் நதி அபாய அளவை தாண்டி கரைபுரண்டோடுகிறது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் மழை வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர். தலைநகர் டெல்லியில் பருவமழைக்கு 5 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பலியான 10 பேரில் 9 பேர் புனித யாத்திரை வந்தவர்கள். நிலச்சரிவில் சிக்கி மரணம் அடைந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் 1979-ம் ஆண்டுக்குப் பின் யமுனையில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. டெல்லி யூனியன் பிரதேச அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இன்னொரு பக்கம் யமுனை நதியில் ஹரியானா மாநில அரசு அணைகளில் இருந்து பெருமளவு நீரையும் திறந்துவிடுகிறது. இதனால் பழைய யமுனை நதி பாலத்தில் ரயில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே உத்தரகாண்ட் மாநிலத்தின் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்திருக்கிறது வானிலை ஆய்வு மையம். நைனிடால், சம்பாவத், உதம்சிங் நகர் மற்றும் பவுரி கர்வா மாவட்டங்களில் கனமழை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications