‛இந்தியா’ VS என்டிஏ கூட்டணி.. 13 தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்.. வெல்லப்போவது யார்?
டெல்லி: தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி உள்பட இந்தியா முழுவதும் 7 மாநிலங்களில் காலியாக உள்ள 13 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்து வருகின்றனர். இதில் பல தொகுதிகளுக்கு பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணி வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளுக்கும் எம்எல்ஏக்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தாலோ அல்லது துரதிர்ஷ்டவசமாக காலமானாலோ அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் என்பது நடத்தப்பட்டு புதிய எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அந்த வகையில் இந்தியாவில் இன்று 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிகளில் காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எந்தெந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
விக்கிரவாண்டி: தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுகவின் புகழேந்தி காலமானார். இதையடுத்து இன்று இடைத்தேர்தல் நடந்து வருகிறது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணியில் பாமக சார்பில் சி அன்புமணி, சீமானின் நாம் தமிழர் சார்பில் அபிநயா ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். அதிமுக தேர்தலை புறக்கணித்துள்ளது. இந்த தொகுதியில் மதியம் 1 மணி நிலவரப்படி மொத்தம் 50.95 சதவீத ஓட்டு பதிவாகி இருந்தது.
மேற்கு வங்கம்: அதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மேற்கு வங்க மாநிலத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநில முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். இத்தகைய சூழலில் தான் இன்று மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச், ரணகாட் தக்சின் (எஸ்சி), பாக்தா (எஸ்சி), மணிக்தலா ஆகிய 4 தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு களைக்கட்டியுள்ளது. அதன்படி 11 மணி நிலவரப்படி ரணகாட் தக்சின் தொகுதியில் 26.32 சதவீதம், ராய்கஞ்ச் தொகுதியில் 25.98 சதவீதம், பாக்தா தொகுதியில் 22.63 சதவீதம், மணிக்தலா தொகுதியில் 21.89 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது.
இமாச்சல பிரதேசம்: இதற்கு அடுத்தப்படியாக இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சுக்வீந்தர் சிங் உள்ளார். இங்குள்ள 3 சட்டசபை தெகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. அதன்படி இமாச்சல பிரதேசத்தில் டேஹ்ரா,ஹமிர்பூர், நலகார்க் தொகுதிகளில் காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. இதில் டேஹ்ரா தொகுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏனென்றால் இந்த தொகுதியில் முதல்வர் சுக்விந்தர் சிங்கின் மனைவி கம்லேஷ் தாகூர் போட்டியிடுகிறார்.
காலை 11 மணி நிலவரப்படி ஹமிர்பூர் தொகுதியில் 31.81 சதவீத ஓட்டு, நலகார்க் தொகுதியில் 34.63 சதவீத ஓட்டுகள், முதல்வர் சுக்விந்தர் சிங்கின் மனைவி கம்லேஷ் தாகூர் போட்டியிடும் டேஹ்ரா தொகுதியில் 31.61 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது.
பீகார்: மேலும் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி ஆட்சி செய்யும் பீகாரில் முதல்வராக நிதிஷ் குமார் உள்ளார். இங்கு ரூபாலி எனும் தொகுதியில் இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 18.48 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது.
பஞ்சாப்: அதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு சட்டசபை தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. பஞ்சாப்பில் தற்போது ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக பகவந்த் மான் உள்ளார். இத்தகைய சூழலில் தான் பஞ்சாப்பின் ஜலந்தர் மேற்கு தொகுதிக்கு இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 23.40 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது.
உத்தரகாண்ட்: அதேபோல் உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 2 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. அதன்படி பத்ரிநாத், மங்களூரு தொகுதிகளில் இன்று பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர். காலை 11 மணி நிலவரப்படி பத்ரிநாத் தொகுதியில் 21.20 சதவீத ஓட்டு, மங்களூரு தொகுதியில் 22.63 சதவீத ஓட்டும் பதிவாகி இருந்தது.
மத்திய பிரதேசம்: இதுதவிர மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் அங்குள்ள அமர்வாரா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்து வருகிறது. இந்த தொகுதியில் மதியம் 11 மணி நிலவரப்படி 36.81 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது.
இதில் அனைத்து தொகுதிகளிலும், பாஜக தலைமையிலான என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் ‛இந்தியா' கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. அதன்பிறகு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக ஸ்ட்ராங் ரூமிற்கு எடுத்து செல்லப்பட்டு வைக்கப்படும். பிறகு ஜுலை 13ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இன்று நடக்கும் தேர்தலையொட்டி அனைத்து தொகுதிகளிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications