டெல்லி ஹோட்டல் தீ விபத்து.. கோவையை சேர்ந்த 2 தமிழர்களும் உடல் கருகி பலி
டெல்லி ஹோட்டல் தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் 2 பேர் தமிழர்கள் என தெரியவந்துள்ளது.
Recommended Video
டெல்லி: இன்று விடிகாலை டெல்லி ஸ்டார் ஹோட்டலில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த 17 பேரில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவந்துள்ளது.
டெல்லியின் கரோல் பாக் பகுதியில் செயல்பட்டு வரும் அர்பிட் பேலஸ் ஹோட்டலில் இன்று அதிகாலை திடீரென 4.30 மணி அளவில் தீவிபத்து ஏற்பட்டது.
ஹோட்டலில் மொத்தம் 65 அறைகளில் 150-க்கும் அதிகமானோர் தங்கியிருந்தனர். அதில் ஏராளமான பெண்களும், குழந்தைகளும் அடக்கம். சுற்றிலும் தீ மளமளவென பரவி விட்டதால் வெளியே அவர்களால் உடனடியாக தப்பி வர முடியவில்லை என்பதால் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் மூச்சுத்திணறியே இறந்திருக்கிறார்கள். மேலும் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஜன்னல் வழியாக குதித்தவர்களும் உயிரிழந்த பரிதாபமும் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த 17 பேரில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அரவிந்த் சிவகுமாரன் , நந்தகுமாரன் ஆகியோர் உடல் கருகியே உயிரிழந்து விட்டதாகவும், இவர்கள் இருவருமே கோவையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. உயிரிழந்த இருவரின் உடல்களும் டெல்லி ஆர்எம்எல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.