எங்கும் கொரோனா.. எகிப்தின் நைல் நதியில் நிறுத்தி வைக்கப்பட்ட கப்பலில் சிக்கி தவிக்கும் 17 தமிழர்கள்
டெல்லி: கொரோனா வைரஸ் பீதியால் எகிப்து நாட்டின் நைல் நதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் தமிழகத்தைச் சேர்ந்த 17 பேர் சிக்கி தவித்து வருகிறார்கள். இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் அன்டார்டிகா கண்டத்தை தவிர ஏனைய கண்டங்களில் பரவி வருகிறது. இந்த வைரஸால் சீனாவில் 3000-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வரும் பயணிகளுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு நெகட்டிவ் என வந்துவிட்டால் அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர்.
ஒரு வேளை கொரோனா அறிகுறி இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து மற்றொரு நாடுகளுக்கு வரும் கப்பல் நடுக்கடலில் நாள் கணக்கில் நிறுத்தி வைக்கப்படுவதால் வைரஸ் அறிகுறி இல்லாதோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுலா
கொரோனா வைரஸ் காரணமாக எகிப்து நாட்டில் நைல் நதியில் நிறுத்தி வைக்கப்பட்ட கப்பலில் தமிழகத்தைச் சேர்ந்த 17 பேர் சிக்கி தவித்து வருகிறார்கள். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் வனிதா ரங்கராஜ். இவர் அப்பகுதியில் சரணாலயம் என்ற ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வருகிறார். இவர் தனது கணவர் ரங்கராஜுடன் கடந்த மாதம் 27 ஆம் தேதி எகிப்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

18 பேர்
சேலத்தை சேர்ந்த கிராண்ட் ராயல் டூர்ஸ் என்ற நிறுவனத்துடன் வனிதா தம்பதியும் சேலம், சென்னை , கோவை மாவட்டங்களைச் சேர்ந்த 18 பேர் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் ஏ சாரா என்ற கப்பலில் நைல் நதிக்கு சென்றனர். அந்த கப்பலில் இருந்த வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நைல் நதியில் கப்பல்
சென்னையை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா அறிகுறி காரணமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து லக்ஷர் நகரத்திற்கு அருகே நைல் நதியில் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுமார் 14 நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மார்ச் 7-ஆம் தேதி இந்தியா திரும்பவுள்ள நிலையில் இவர்கள் நைல் நதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

கோரிக்கை
இதனால் உணவு கிடைக்காமல் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். மேலும் கப்பலில் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதால் அந்த நோய் பாதிப்பு இல்லாதோரையும் ஒரே கப்பலில் வைத்துள்ளதால் தமிழர்கள் அச்சத்தில் உள்ளனர். தங்களை விரைந்து மீட்டு சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications