இத்தாலி கடற்படை வீரர்களுக்கு எதிரான உச்ச நீதிமன்ற வழக்கு.. முடித்து வைக்க மத்திய அரசு மனு!
டெல்லி: இரண்டு இத்தாலி கடற்படை வீரர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கை முடித்து வைக்கும்படி மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
2 கேரளா மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலி கடற்படை வீரர்களுக்கு எதிரான வழக்கில் நேற்று சர்வதேச
தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்காக இந்தியா இழப்பீடு கோரலாம் என்று சர்வதேச தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இத்தாலி வீரர்கள் இருவரையும் இந்திய நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது என்று சர்வதேச தீர்ப்பாயம் கூறியுள்ளது. சர்வதேச ஐநா சட்டப்படி இந்தியா இத்தாலி வீரர்களை இந்திய நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது, அவர்களை கைது செய்ய முடியாது என்று சர்வதேச தீர்ப்பாயம் கூறியுள்ளது.
இவர்களை கைது செய்து இந்தியா கொண்டு வர மத்திய அரசு முயன்று தோல்வியை தழுவி உள்ளது. இந்த நிலையில்தான் இந்தியாவில் இந்த வழக்கை நடத்த முடியாது என்பதால் இரண்டு இத்தாலி கடற்படை வீரர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கை முடித்து வைக்கும்படி மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த இரண்டு மீனவர்களை இந்திய கடற்பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு இத்தாலி கடற்படை வீரர்கள் இரண்டு பேர் சுட்டுக்கொன்றனர். என்ரிகா லெக்சி என்ற இத்தாலி நாட்டு சரக்குக் கப்பலில் இருந்த சால்வாட்டர் கிரோன் மற்றும் மாசிமிலியானோ லாட்டோர் என்ற இரண்டு கடற்படை வீரர்கள்தான் இந்த குற்றத்தை செய்தது.
கேரள கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஜெலஸ்டைன், அஜீஸ் பிங்கு இருவரும் இதில் கொல்லப்பட்டனர். இதற்கு எதிராக சர்வதேச தீர்ப்பாயத்தில் நடந்த விசாரணையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications