எல்லாம் கணக்குதான்.. பாஜக தலைகளை சந்திக்கும் அதிமுக புள்ளிகள்.. டெல்லியில் முக்கிய விவாதம்!
டெல்லியில் மத்திய பாஜக அமைச்சர்களை அதிமுகவை சேர்ந்த அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் சந்திக்க உள்ளனர்.
டெல்லி: இன்று மாலையும் நாளையும் டெல்லியில் மத்திய பாஜக அமைச்சர்களை அதிமுகவை சேர்ந்த அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் சந்திக்க உள்ளனர்.
2019 - இந்த நான்கு இலக்க எண்தான் தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ஆட்டிப்படைக்கிறது. 2019ல் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
முக்கியமாக நாடாளுமன்ற தேர்தலுக்கு மூன்று விதமான கூட்டணிகள் உருவாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. இதற்கு மத்தியில், அதிமுக எம்எல்ஏக்கள் இன்று பாஜக அமைச்சர்களை சந்திக்க உள்ளனர்.
சந்திக்கிறார்கள்
இன்று மாலை நடக்கும் சந்திப்பில் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் அதிமுக லோக் சபா எம்.வி தம்பிதுரை ஆகியோர் மத்திய பாஜக அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் அருண் ஜேட்லியை சந்திக்க உள்ளனர். இன்று மாலை நடக்கும் சந்திப்பை தொடர்ந்து நாளையும் இதேபோல் இன்னொரு சந்திப்பு நடக்க உள்ளது.
வாய்ப்பு
இந்த சந்திப்பில் கஜா நிவாரணம் குறித்த அறிக்கை ஒன்றை அதிமுக அமைச்சர்கள் சமர்ப்பிக்க இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. கஜா புயலுக்கான நிவாரணத்தை இன்னும் மத்திய அரசு வழங்கவில்லை. புயல் பாதித்து இரண்டு மாதம் ஆக போகும் நிலையில் இன்னும் மத்திய அரசு எந்த வித உதவியும் செய்யவில்லை.
கூட்டணி குறித்து
கஜா புயல் குறித்து பேசுவதற்கு இடையில் இவர்கள் நாடாளுமன்ற கூட்டணி குறித்தும் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2019 தேர்தலில் பாஜக தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் இன்று நடக்கும் என்றும் தெரிகிறது.
ஏற்கனவே அறிவித்து இருந்தார்
ஏற்கனவே அதிமுக அமைச்சர்கள், மத்தியில் அதிமுக பெரிய கூட்டணியை உருவாக்கும் என்றும் கூறி இருந்தனர். அதற்கு அடித்தளமாக இந்த பேச்சு இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் விரைவில் அதிமுக பாஜக கூட்டணி குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புகள் உள்ளது.