லோக்சபா தேர்தல் வியூகமாம்- கழற்றிவிடப்பட்ட தலைகளுக்கு மாநில பொறுப்புகள் கொடுத்தது பாஜக!
டெல்லி: பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் முதல்வராக இருந்து தூக்கி அடிக்கப்பட்டவர்கள், ஓரம்கட்டப்பட்ட மூத்த தலைவர்கள் என பலரையும் லோக்சபா தேர்தலுக்காக மாநிலங்களின் பொறுப்பாளர்களாக நியமித்துள்ளது பாஜக.
லோக்சபா தேர்தலுக்கான பணிகளில் பாஜக படுதீவிரமாக உள்ளது. இது தொடர்பாக டெல்லியில் பல்வேறு கட்ட ஆலோசனைகளை அக்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக வெல்லும் தொகுதிகள், வெல்ல வாய்ப்பில்லாத தொகுதிகள் தொடர்பான சர்வே முடிவுகளை வைத்துக் கொண்டு வியூகங்களை வகுத்துக் கொண்டிருக்கிறது பாஜக. இதற்கேற்ப ஒவ்வொரு மாநிலத்திலும் தீவிர கவனம் செலுத்தவும் அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

இன்னொரு பக்கம் பாஜகவில் ஏற்றங்கள் திடீரென கிடைப்பதும் இறக்கங்கள் திடீரென நிகழ்வதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. அப்படி ஓரம்கட்டப்பட்ட பல பாஜக தலைவர்கள் இருக்கும் இடமே தெரியாமல் போய்விடும். இதற்கு நல்ல உதாரணம் பாஜகவின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி.
இந்நிலையில் லோக்சபா தேர்தலுக்கான பணிகளில் பாஜக தீவிரம் காட்டிவருகிறது. இதன் ஒருபகுதியாக பல்வேறு மாநிலங்களின் பாஜக பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இப்பொறுப்புக்கு ஓரம்கட்டப்பட்ட சீனியர்கள் பலரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பீகார் மாநில பொறுப்பாளராக வினோத் தாவ்தே, சத்தீஸ்கர் மாநிலத்துக்கு ஓம் மாத்தூர், மேற்கு வங்க மாநிலத்துக்கு மங்கள் பாண்டே ஆகியோர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஹரியானாவுக்கு திரிபுராவின் முன்னாள் முதல்வர் பிப்லாப் தேப், முன்னாள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவதேகருக்கு கேரளா, திரிபுராவுக்கு மகேஷ் சர்மா. பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
குஜராத் முதல்வர் பொறுப்பை பறிகொடுத்த விஜய் ரூபானிக்கு பஞ்சாப் மாநில பொறுப்பாளர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது.
பாஜகவில் பல பொறுப்புகளை வகித்துவிட்டு தூக்கி எறியப்பட்ட தலைவர்கள் அதிருப்தி அடைந்து எந்த கோஷ்டியையும் உருவாக்கிவிடக் கூடாது என்பதற்காக இப்போது மாநிலங்களின் பொறுப்பை தலையில் கட்டிவிட்டதாம் டெல்லி மேலிடம்.












Click it and Unblock the Notifications