தெலுங்கானா: முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் தலைவர்களிடையே குடுமிபிடி சண்டை-மண்டை காய்ந்த டெல்லி மேலிடம்!
டெல்லி: தெலுங்கானாவில் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சியில் யார் முதல்வர் என்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. முதல்வர் பதவிக்காக முட்டி மோதும் காங்கிரஸ் தலைவர்களால் டெல்லி காங்கிரஸ் மேலிடம் கடும் விரக்தியில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
119 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 65 இடங்களைக் கைப்பற்றியது. பிஆர்எஸ் கட்சி 39 இடங்களில்தான் வென்றது.

தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டிதான் முதல்வர் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத ஒன்றாக இருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துவிட்ட நிலையில் முதல்வர் பதவிக்காக காங்கிரஸ் தலைவர்கள் அடித்து கொண்டிருக்கின்றனர். இதனால் டெல்லி மேலிடம் கடும் விரக்தியில் இருக்கிறதாம்.
ரேவந்த் ரெட்டி: தெலுங்கானாவில் காங்கிரஸை உயிர்ப்பித்து ஆட்சியில் உட்கார வைத்த மூலவர் ரேவந்த் ரெட்டி என்பதில் சந்தேகமில்லை. பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியில் அரசியல் வாழ்க்கையை தொடங்கி தற்போது காங்கிரஸின் முதல்வர் முகமாக கிடுகிடுவென உயர்ந்தவர் ரேவந்த் ரெட்டி. தெலுங்கானா முதல்வராக இருந்த சந்திரசேக ராவை எதிர்த்து கம்மாரெட்டி (கமரெட்டி) தொகுதியில் களமிறங்க வேண்டும் என டெல்லி மேலிடம் கட்டளையிட்ட போது அதை அப்படியே ஏற்று போட்டியிட்டவர் ரேவந்த் ரெட்டி. கம்மாரெட்டியில் தோல்வியைத் தழுவிவிட்டார் என்பது வேறு கதை. 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ரேவந்த் ரெட்டி நியமிக்கப்பட்ட பின்னர்தான் அக்கட்சிக்கு உயிரே வந்தது என்பது மறுக்க முடியாதது. அதனால் தம்மை முதல்வராக்க வேண்டும் என ரேவந்த் ரெட்டி கோருகிறார். அவருக்கும் கணிசமான எம்.எல்.ஏக்கள் ஆதரவு தருகின்றனர்.
பட்டி விக்ரமார்க்க மல்லு: தெலுங்கானா சட்டசபை காங்கிரஸ் தலைவராக இருந்தவர் பத்தி விக்ரமார்க்க மல்லு (பட்டி விக்ரமார்க்க மல்லு). முதல்வராக இருந்த சந்திரசேகர ராவை ஆட்சியில் இருந்து விரட்டியடிதத்தில் தமக்கு பங்கு உண்டு என உரிமை கோருகிறார் மல்லு. தேர்தலின் போது தெலுங்கானா தழுவிய 1400 கி.மீ பாதயாத்திரை சென்றவர். தமது பாதயாத்திரைதான் காங்கிரஸை ஆட்சியில் அமர்த்தியது என வலுவாக நம்புகிறார் மல்லு. அதனால் தமக்கே முதல்வர் பதவி என அடம் பிடிக்கிறார்.
உத்தம் குமார் ரெட்டி: 2021-ம் ஆண்டு வரை தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர் உத்தம் குமார் ரெட்டி. இவருக்கு பதிலாகத்தான் ரேவந்த் ரெட்டி தலைவராக நியமிக்கப்பட்டார். தொண்டர்கள் செல்வாக்கு தமக்கே அதிகம் என நம்புகிறார் உத்தம் குமார் ரெட்டி. ஆகையால் தமக்கே முதல்வர் பதவி தர வேண்டும் என போர்க்கொடி தூக்குகிறார் உத்தம் குமார் ரெட்டி.
டெல்லியில் டிகேஎஸ்: தெலுங்கானா விவகாரங்களை கவனித்து வரும் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார், முதல்வர் பதவிக்கான போட்டியில் கடும் சிக்கல் எழுந்ததால் டெல்லி சென்றார். டெல்லியில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்காவுடன் தெலுங்கானா முதல்வர் யார் என்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தினார் டிகே சிவகுமார்.












Click it and Unblock the Notifications