ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களை புதுப்பிக்க மேலும் 3 மாதம் அவகாசம்.. மத்திய அரசு அறிவிப்பு !
டெல்லி: ஓட்டுநர் உரிமம் உட்பட வாகன ஆவணங்களை புதுப்பித்துக்கொள்ள மத்திய அரசு மேலும் 3 மாத காலம் அவகாசம் அளித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கொண்டுவரப்பட்ட பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் முழுமையாக அகலாததால் இந்த அவகாசம் தரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;

கால அவகாசம்
மோட்டார் வாகனங்களின் உரிமம், ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு ஆவணங்களை புதுப்பிப்பதற்கான காலக்கெடு 2021-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்தக் காலக்கெடு நீட்டிப்பானது 2020 பிப்ரவரி மாதம் முதல் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரை காலாவதியாகும் மோட்டார் வாகன ஆவணங்களுக்கு பொருந்தும்.

முக்கிய அறிவிப்பு
மேற்கண்ட இந்த இடைப்பட்ட தேதிகளில் காலாவதியான வாகன ஆவணங்களை 2021-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை செல்லத்தகுந்த ஆவணங்களாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த அறிவிப்பை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர்கள்
கொரோனா பரவல் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராததாலும் ஊரடங்கால் மோட்டார் வாகனத் தொழில்கள் பாதிப்படைந்ததாலும் மத்திய அரசு இந்த அவகாசத்தை அளித்திருக்கக் கூடும் எனத் தெரிகிறது. இதனிடையே இந்த அறிவிப்புக்கு மோட்டார் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அறிவிப்பு அறியாமல்
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மத்திய அரசின் இத்தகைய அறிவிப்பையே அறியாமல், வண்டி புக் எடுத்துகிட்டு வா, லைசென்ஸ் டேட் இல்லை, புக் எக்ஸ்பைரி ஆகிவிட்டது எனக் கூறி வாகனங்களை மறித்து பிடித்து போக்குவரத்து காவலர்கள் விசாரணை செய்யத்தான் செய்கிறார்கள். இனி வரும் நாட்களிலாவது மத்திய அரசின் அறிவிப்பை அறிந்து போக்குவரத்துக் காவலர்கள் செயல்பட வேண்டும் என்பதே ஓட்டுநர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications