38 மாவட்டங்களில் இப்பவும் 'நடமாடும்' நக்சல்கள்.. 2023-ல் 138 பேரை பலி கொண்ட மாவோயிஸ்டுகள்!
டெல்லி: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் 38 மாவட்டங்கள் இடதுசாரி தீவிரவாதத்தால் (Naxals) (Maoists) (நக்சலைட்டுகள்) (மாவோயிஸ்டுகள்) பாதிக்கப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது. டாளுமன்ற ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதிலளிக்கையில் இதனைத் தெரிவித்தார். மேலும் 2019-20 முதல் 2023-24 வரையிலான கடந்த 5 ஆண்டுகளில், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில், சிறப்பு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ரூ.4350.78 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்த பதில்: தற்போது நாட்டில் 38 மாவட்டங்கள் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் 60 மாவட்டங்கள் இடதுசாரி தீவிரவாதத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின்படி, காவல்துறை, பொது ஒழுங்கு சம்பந்தப்பட்ட துறைகள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இருப்பினும், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முயற்சிகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக உள்ளது. இடதுசாரி தீவிரவாத பிரச்சனையை முழுமையாக கையாள்வதற்காக, "இடதுசாரி தீவிரவாதத்திற்கு தீர்வு காண்பதற்கான தேசிய கொள்கை, செயல் திட்டம்" 2015-ல் அங்கீகரிக்கப்பட்டது
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய ஆயுத போலீஸ் பட்டாலியன்கள், மாநில காவல் படைகளை நவீனப்படுத்துவதற்கான பயிற்சி, ஆயுதங்கள், உபகரணங்கள், உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்ளுதல், பலப்படுத்தப்பட்ட காவல் நிலையங்களை நிர்மாணித்தல் போன்றவற்றை மத்திய அரசு செய்து வருகிறது.
வளர்ச்சியைப் பொறுத்தவரை, முன்னோடித் திட்டங்கள் தவிர, இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில், சாலைக் கட்டமைப்பை விரிவுபடுத்துதல், தொலைத்தொடர்பு இணைப்பை மேம்படுத்துதல், திறன், நிதி உள்ளடக்கம் ஆகியவற்றில் சிறப்பு திட்டங்களுடன் மத்திய அரசு பல்வேறு குறிப்பிட்ட முயற்சிகளை எடுத்துள்ளது.
2019-20 முதல் 2023-24 வரையிலான கடந்த 05 ஆண்டுகளில், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில், சிறப்பு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ரூ.4350.78 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சியைப் பொறுத்தவரை, கீழ்க்கண்ட குறிப்பிட்ட முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன:
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலைக் கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்காக இதுவரை 14,529 கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தொலைத்தொடர்பு இணைப்பை மேம்படுத்த, 6524 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ளூர் மக்களின் நிதி வசதியை மேம்படுத்த 5731 அஞ்சலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இடதுசாரி தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட 30 மாவட்டங்களில் 1007 வங்கிக் கிளைகளும், 937 தானியங்கி பணம் வழங்கும் மையங்களும் திறக்கப்பட்டுள்ளன.
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 46 தொழிற்பயிற்சி நிலையங்களும், 49 திறன் மேம்பாட்டு மையங்களும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பழங்குடியினரின் தரமான கல்விக்காக 178 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
அரசின் திட்டங்கள் காரணமாக, இடதுசாரி தீவிரவாதம் தொடர்பான வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை 73% குறைந்துள்ளது. இடதுசாரி தீவிரவாதத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் (பாதுகாப்புப் படையினர் + பொதுமக்கள்) பெருமளவு குறைந்துள்ளது. 2023-ம் ஆண்டு 138 பேர் இடதுசாரி தீவிரவாதத்தால் உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications