‛‛4 முக்கிய மசோதா’’.. பழைய கட்டத்துக்கு பிரியா விடை! நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் ஏன்? வெளியான லிஸ்ட்
டெல்லி: நாடாளுமன்றத்தில் வரும் 18 ம் தேதி முதல் 22ம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இதற்கான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 75 ஆண்டு கால நாடாளுமன்ற பயணம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதோடு 4 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தொடர் வரும் 18 ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்படுவதன் நோக்கம் குறித்த தகவல்களை மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்பட யாரும் தெரிவிக்கவில்லை. இதனால் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து பல முக்கிய மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்ற உள்ளதாக தகவல்கள் பரவின.
மேலும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்படுவதன் அஜன்டாவை வெளியிடாமல் மத்திய அரசு பதுங்குவதாக எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்நிலையில் தான் இன்று நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது பொதுவாக நாடாளுமன்ற கூட்டம் தொடங்கும்போது அதில் நிறைவேற்றப்பட உள்ள மசோதாக்கள், கூட்டத்தொடருக்கான நோக்கம் என்பதை வெளிக்காட்டும் வகையில் தோராய பட்டியலுடன் நிகழ்ச்சி நிரல் வெளியாகும். அந்த வகையில் தான் தற்போது சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரல் வெளியாகி உள்ளது.
அதில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தின் முதல் நாளான 18 ம் தேதி வழக்கமான அலுவல் தவிர கடந்த 75 ஆண்டு நாடாளுமன்ற பயணம் குறித்து விவாதம் நடைபெற உள்ளது. இந்த வேளையில் 75 ஆண்டில் நாடாளுமன்ற பயணம் என்ற தலைப்பின் கீழ் சாதனைகள், அனுபவங்கள், நினைவுகள் மற்றும் கற்றல்கள் குறித்து எம்பிக்கள் பேச உள்ளனர்.
தற்போதைய சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டம் மட்டுமே நாடாளுமன்ற பழைய கட்டடத்தில் நடக்க உள்ளது. அதன்பிறகு 19ம் தேதி முதல் நாடாளுமன்ற இரு சபைகளும் புதிய நாடாளுமன்ற கட்டத்தில் இயங்க உள்ளது. இதனை மனதில் வைத்து தான் முதல் நாள் கூட்டத்தில் நாடாளுமன்ற பயணம் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.
மேலும் இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மொத்தம் 4 மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வழக்கறிஞர்கள் திருத்த மசோதா, தபால் அலுவலக மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. மேலும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நியமன பணி நிலை மசோதா, அச்சு ஊடகம் மற்றும் பதிவுகள் மசோதா என மொத்தம் 4 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications