தாறுமாறாக சுற்றிய ஒஎன்ஜிசி ஹெலிகாப்டர்.. கட்டுப்பாட்டை இழந்து அரபிக் கடலில் நொறுங்கியது.. 4 பேர் பலி
டெல்லி: ஒஎன்ஜிசி நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் கடலில் விழுந்ததில் மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா கடல் பகுதியில் மத்திய அரசின் ஒஎன்ஜிசி நிறுவனத்திற்குச் சொந்தமாகப் பல இடங்களில் கச்சா எண்ணெய்யை எடுக்கும் ரிக்குகள் அமைந்துள்ளன.
அந்த ரிக்குகள் செயல்படுத்தவும் பாரமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அவ்வப்போது ஹெலிகாப்டர் மூலம் அங்கு அனுப்பப்படுவார்கள்.

ஹெலிகாப்டர்
அதன்படி இன்று மகாராஷ்டிரா அருகே அரேபிக் கடலில் சாகர் கிரண் ரிக் என்ற இடத்திற்கு 7 பயணிகள் மற்றும் இரண்டு விமானிகளுடன் ஹெலிகாப்டர் ஒன்று வழக்கம் போலப் புறப்பட்டுச் சென்றது. அங்கு அரேபிக் கடலில் அமைக்கப்பட்டு இருந்த ஹெலிபேட்டில் அந்த ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்றது. அப்போது அந்த ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாகச் சுழலத் தொடங்கியது. அதைக் கட்டுக்குள் கொண்டு வர விமானி எடுத்த முயற்சிக்கும் பலன் இல்லை.

அரபிக்கடல்
இறுதியாக அந்த ஹெலிகாப்டர் அரபிக்கடலில் விழுந்து விபத்திற்குள்ளானது. இதையடுத்து கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் கடலில் வீழ்ந்தவர்களை மீட்கும் பணிகளை உடனடியாக தொடங்கினர். சில மணி நேரம் மீட்புப் பணிகள் நீடித்த நிலையில் ஒன்பது பேரும் கடலில் இருந்து மீட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.. இந்தச் சூழலில் கடலில் இருந்து மீட்கப்பட்டவர்களில் நான்கு பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.

விபத்து
ஆறு ஒஎன்ஜிசி பணியாளர்கள், ஒப்பந்ததாரர் ஒருவர் என மொத்தம் 7 பயணிகள் இந்த ஹெலிகாப்டரில் பயணித்து உள்ளனர். பணியாளர்கள் மற்றும் பொருட்களைக் கரையிலிருந்து கடல் ரிக்கிற்கு எடுத்துச் சென்ற போது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த நான்கு பேரில் மூன்று பேர் ஒஎன்ஜிசி ஊழியர்கள் ஆகும். மும்பை கடற்கரையில் இருந்து மேற்கே 111 கிமீ தொலைவில் அமைந்துள்ள ரிக் பகுதியில் ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்றபோது விபத்து நடந்துள்ளது.

1.5 கிலோமீட்டர்
இருப்பினும், ரிக் அமைந்துள்ள இடத்தில் இருந்து சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவிலேயே அது கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்துள்ளது. ஹெலிகாப்டர் சென்று சேர வேண்டிய சாகர் கிரண் மையத்திற்குத் தான் விபத்து குறித்து முதலில் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படகு, ஒருவரை உயிருடன் மீட்டுள்ளது.

விபத்து
இதையடுத்து மும்பையில் இருந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள மால்வியா-16 என்ற கப்பல் அனுப்பப்பட்டது. அதின் மூலம் 5 பேர் மீட்கப்பட்டனர். மேலும், கடலில் இருந்த ஒரு கடலோர காவல்படையின் கப்பலும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளத் திருப்பி விடப்பட்டது. இந்த இரு கப்பல்களைத் தவிர மற்றொரு கப்பலும் மும்பையில் இருந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள அனுப்பப்பட்டது. மீட்கப்பட்டவர்கள் மற்றொரு ஹெலிகாப்டர் உதவி உடன் விரைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

என்ன காரணம்
இந்தச் சூழலில் தான் இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல ஒஎன்ஜிசி சார்பிலும் விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications