4 பிரதமர்களிடம் ஜெயலலிதா பற்றிய ரகசிய கோப்புகள்; அதிர வைத்த குறிப்புகள்; முன்னாள் IAS அதிகாரி தகவல்!
டெல்லி: ஜெயலலிதா உள்ளிட்ட பல முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களின் ரகசியங்கள் அடங்கிய கோப்புகள் 4 பிரதமர்கள் வசம் இருந்ததாக கூறி முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஒருவர் அதிர வைத்திருக்கிறார்.
தேவகவுடா குறித்த வாழ்க்கை வரலாற்று நூல் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி மீனாட்சிசுந்தரம் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறார். தேவகவுடா பிரதமராக இருந்த போது அவரது அலுவலக இணைச் செயலாளராகவும், தேவகவுடாவின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாகவும் இருந்தவர் மீனாட்சிசுந்தரம் ஐ.ஏ.எஸ்.

அவர் தான் இப்போது அரசியல் கட்சித் தலைவர்களின் ரகசியங்கள் அடங்கிய கோப்புகள் குறித்த தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இது தொடர்பாக ஆங்கில இணையதள ஊடகமான தி பிரிண்ட்-க்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ''ஜெயலலிதா, முலாயம் சிங் யாதவ், பங்காரப்பா, சரத்பவார் என நாடு முழுவதும் உள்ள பல அரசியல் கட்சித் தலைவர்களின் ரகசியங்கள் நரசிம்மராவின் கைகளில் இருந்ததாக கூறியிருக்கிறார்.
தனக்கு குடைச்சல் கொடுக்கும் நோக்கிலும், தனது அரசுக்கு சிக்கல் உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டால் அந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட அரசியல் தலைவரின் ரகசியங்களை வெளியிட நரசிம்மராவ் காத்திருந்ததாக தெரிவிக்கிறார் மீனாட்சிசுந்தரம் ஐ.ஏ.எஸ்.
இந்நிலையில் மீண்டும் தாம் பிரதமராக வர முடியாத காரணத்தால், அரசியல் கட்சித் தலைவர்களின் ரகசியங்கள் அடங்கிய கோப்புகளை பெற்றுக்கொள்ளுமாறு அப்போது பிரதமராக பதவியேற்ற தேவகவுடாவிடம் நரசிம்மராவ் கேட்டுக்கொண்டதாகவும், இதையடுத்து அந்த கோப்புகளை பெறுவதற்காக தாம் சென்றதாகவும் மீனாட்சி சுந்தரம் ஐ.ஏ.எஸ்.தெரிவித்திருக்கிறார்.
மேலும், அந்தக் கோப்புகளின் உள்ளே தாம் படிக்காவிட்டாலும் கூட, முன்னுரையை பார்க்கும் போதே அது அரசியலில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தக் கூடிய தலைவர்களின் ரகசியங்கள் இருந்ததை அறிய முடிந்ததாக கூறியிருக்கிறார். மேலும், இந்த ரகசிய கோப்புகளை தேவகவுடாவுக்கு பிறகு பிரதமரான ஐ.கே.குஜ்ராலிடம் தாம் கொடுக்க விரும்பிய போது, தன்னிடம் நம்பிக்கைகுரிய அதிகாரிகள் இல்லாததால் தன்னையே அதனை பாதுகாத்து வைக்குமாறு கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார் மீனாட்சிசுந்தரம் ஐ.ஏ.எஸ்.
பிறகு வாஜ்பாய் பிரதமரான போது அவரது அலுவலக இணைச் செயலாளராக இருந்த அசோக் சைக்கியாவிடம் இந்த கோப்புகள் ஒப்படைக்கப்பட்டதாகவும் வாஜ்பாய் ஆட்சிக்காலத்திற்கு பிறகு தலைவர்களை பற்றிய இந்த ரகசிய ஆவணங்களை யாருக்காவது அசோக் கொடுத்தாரா என்ற விவரம் தனக்குத் தெரியவில்லை எனக் கூறியிருக்கிறார்.
கடந்த 2004-ம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமரான பிறகு அந்த ஆவணம் என்னவானது என்பது மர்மமாகவே உள்ளது என்றும் விசாரிக்கப்பட வேண்டிய அசோக் சைக்கியா கடந்த 2007-ம் ஆண்டே காலமாகிவிட்டதாகவும் மீனாட்சி சுந்தரம் ஐ.ஏ.எஸ். தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே 2014-ம் ஆண்டு பிரதமரின் முதன்மைச் செயலாளராக பொறுப்பேற்ற நிர்பேந்திரா மிஸ்ரா, இது போன்ற ஒரு தகவலை தாம் கேள்விப்பட்டதில்லை என்றும் அது குறித்து தன்னிடம் யாரும் எதுவும் தெரிவிக்கவில்லை எனவும் தி பிரிண்ட் இணையதள ஊடகத்துக்கு விளக்கம் அளித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications