வரலாற்றிலேயே இதுவரை இல்லை.. இன்று மட்டும் 50 லோக்சபா எம்.பிக்கள் சஸ்பெண்ட்! மொத்தமாக 142 பேர் காலி!
டெல்லி: லோக்சபாவில் இன்று மேலும் 50 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் 142 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கி, நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறி நுழைந்த இருவர் வண்ணப்புகை உமிழும் கருவியை வெடிக்கச் செய்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்பு மீறல் சம்பவம் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். நாடாளுமன்ற தாக்குதல் குறித்து விவாதம் நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 14 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்பியதற்காக திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தமிழச்சி தங்கபாண்டியன், சி.என்.அண்ணாதுரை, காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திருநாவுக்கரசர், திரிணாமூல் எம்.பி.க்கள் கல்யாண் பானர்ஜி, சுகதா ராய் உள்ளிட்ட மக்களவை உறுப்பினர்கள் 33 பேர் நேற்று ஒரே நாளில் மட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மாநிலங்களவையிலும் இதே பிரச்சனையை வலியுறுத்திய திமுக எம்.பிக்களான என்.ஆர்.இளங்கோ, கனிமொழி என்.வி.என். சோமு, கிரிராஜன், எம்.எம்.அப்துல்லா உள்ளிட்ட 45 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதன் மூலம் நேற்று ஒரே நாளில் 78 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக 78 எம்.பி.க்கள் ஒரே நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள விவகாரம் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மக்களவையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விளக்கம் கேட்டு குரல் எழுப்பி லோக்சபாவில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 50 பேர் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுப்பது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.
திருமாவளவன், கார்த்தி சிதம்பரம், ஜெகத்ரட்சகன், தனுஷ் குமார், கணேசமூர்த்தி, சுப்ரியா சுலே, சசி தரூர் உள்ளிட்ட 50 எம்.பி.க்கள் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நேற்று வரை 92 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 50 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை காணாத அளவில் ஒரே கூட்டத்தொடரில் 142 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மக்களவை வரலாற்றில் நேற்று வரை 92 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்து புதிய சாதனை படைத்த மோடி அரசு. இந்நிலையில், அந்த வரலாறு இன்று மீண்டும் திருத்தி எழுதப்பட்டுள்ளது. இன்று மேலும் 50 எம்.பிக்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக 142 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து எம்.பிக்கள், நாடாளுமன்ற வளாக்கத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications