4G-ஐ விட 10 மடங்கு வேகம்! இந்தியாவில் லேட்தான்... ஆனால், விரைவில் வருகிறது 5G.. அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: இந்தியாவில் 5ஜிக்கான ஏலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கேபினட் குழு ஒப்புதல் வழங்கி இருப்பதால் விரைவில் 5ஜி தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வருகிறது.
உலகம் முழுவதும் கடந்த 20 ஆண்டுகளில் செல்போன் தொழில்நுட்பம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சியடைந்து இருக்கிறது.
வளர்ச்சிக்கு ஏற்ப அலைவரிசையையும், இணையதள வேகத்தையும் அதிகரிக்க அலைவரிசையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

அலைவரிசை வளர்ச்சி
அதன் அடிப்படையில் 2ஜி, 3ஜி என்று தரம் உயர்த்தப்பட்ட அலைக்கற்றை சில ஆண்டுகளுக்கு முன் 4ஜியாக தரம் உயர்த்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே 5ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய செல்போன்கள் விற்பனை செய்யப்பட்டாலும் மக்கள் 4ஜி வசதியையே பயன்படுத்தி வருகின்றனர்.

5ஜி ஏலம்
புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த 5ஜி எப்போது வரும் என்று தொழில்நுட்ப பிரியர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில்தான் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் வெளியானது. மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சகம் இந்தியாவில் 5ஜி அலை வரிசையை ஏலம் விடுவதற்கான முன்மொழிவை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய கேபினட் அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்து ஒப்புதலை பெற்று இருக்கிறது.

ஏன் 5ஜி?
5ஜி தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டால் அதை கொண்டு பல்வேறு புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள், வளர்ச்சிகள் மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாகும் என நம்பப்படுகிறது. இதுகுறித்து இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராயின் தலைவர் பி.டி.வகேலா தெரிவிக்கையில், "டிஜிட்டல் தொழில்நுட்பம் கல்வி, மருத்துவம், விவசாயம், ஆற்றல் உள்ளிட்ட பல துறைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த துறைகளில் தொழில்நுட்ப ரீதியாக ஒருங்கிணைந்த முன்னேற்றத்தை ஏற்படுத்த முனைப்பு காட்ட வேண்டும்." என்றார்.

சென்னையில் வெற்றிகரமாக சோதனை
கடந்த மே மாத தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் முதல் 5ஜி அலைவரிசை சோதனையகத்தை சென்னை ஐஐடியில் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் மே 19 ஆம் தேதி சென்னை சென்ற மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ், வெற்றிகரமாக 5ஜி அலைவரிசையை சோதனை செய்தார். தனது செல்போனில் ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்து அவர் பரிசோதித்தார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் 5ஜி தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது என நெகிழ்ந்துள்ளார்.

விரைவில் 5ஜி
மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துவிட்டதால் இம்மாதம் தொலை தொடர்பு நிறுவனங்களுடன் 5ஜி அலைவரிசைக்கான ஏலம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பணிகளில் மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, 20 ஆண்டுகள் செல்லுபடியாகக் ரூ.7.5 லட்சம் கோடி மதிப்புடைய இந்த ஏல ஒப்பந்தத்தின்மூலம், 72,097.85 மெகா ஹெர்ட்ஸ் 5ஜி ஸ்பெக்ரன் ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலம் முடிவுக்கு வந்த சில மாதங்களில் 5ஜி அலைவரிசை செயல்பாட்டுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications