தேச பாதுகாப்பு காரணம்... பாஜகவில் முன்னாள் ராணுவ அதிகாரிகள் 7 பேர் ஐக்கியம்
டெல்லி: நாடாளுமன்றத் தேர்தல் நடந்து வரும் நிலையில், ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ அதிகாரிகள் 7 பேர், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
சமீபத்தில் நடந்த புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, ராணுவத்திற்கு முழு சுதந்திரம் தரப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. பின்னர், புல்வாமா தாக்குதலுக்கு, பதிலடி தாக்குதல் நடத்தியதை பாஜக தேர்தல் விளம்பரமாக பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்தன.
இந்தநிலையில், மத்திய டெல்லியிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ அதிகாரிகள், ஜேபிஎஸ் யாதவ், ஆர்.என்.சிங், எஸ்.கே.பட்யால், சுனில்குமார், நிதின் கோலி, கர்னல் ஆர்.கே.திரிபாதி, விங் கமாண்டர் நவ்னீட் மாகன் ஆகிய 7 பேர் பாஜக வில் இணைந்தனர்.
தேர்தல் செலவை குறைத்து காட்டிய வேட்பாளர்கள்... தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் ராணுவ அதிகாரிகள் பாஜகவில் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், தேச பாதுகாப்பை நிர்மாணிக்கும் கொள்கைகளில், அவர்களின் வழிகாட்டுதல்கள் உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
முன்னதாக, அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் ராணுவ தளபதி தல்பீர் சிங், ஷெசல்ஸ் நாட்டுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டார். இந்திய ராணுவத் தளபதியாக இருந்த காலக்கட்டத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக 16 அதிரடித் தாக்குதல்களை நடத்திய தல்பீர் சிங்கிற்கு, ஓய்வு பெற்ற பிறகு தூதர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ அதிகாரிகள் 7 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர்.