நாடு முழுக்க அரசு ஊழியர்களின் சம்பளம் உயருகிறது.. அடிப்படை சேலரியே பல மடங்கு உயரப்போகிறது.. செம!
டெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான 8-வது மத்திய ஊதியக் குழு (CPC), தனது பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதற்காகப் பிரத்யேக இணையதளத்தைத் தொடங்கியுள்ள ஊதியக் குழு, ஊழியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வரவேற்றுள்ளது. இந்த இணையதளத்தின் மூலம், ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியத் திருத்தம் தொடர்பான தனது பரிந்துரைகளைத் தயாரிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
இருப்பினும், இந்தப் பரிந்துரைகள் உடனடியாக நடைமுறைக்கு வராது. பல்வேறு பொருளாதாரத் தரவுகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்ய வேண்டியிருப்பதால், 8-வது ஊதியக் குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கச் சற்று கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில், ஊதியக் குழு எந்த மாதிரியான கணக்கீட்டு முறையைப் பின்பற்றப் போகிறது என்பதே ஊழியர்கள் மத்தியில் பெரும் விவாதமாக உள்ளது.

ஃபிட்மென்ட் ஃபேக்டர் கணக்கீடு: புதிய மாற்றங்கள் வருமா?
7-வது ஊதியக் குழுவில் பின்பற்றப்பட்ட 'ஃபிட்மென்ட் ஃபேக்டர்' (Fitment Factor) முறையை 8-வது ஊதியக் குழுவும் தொடருமா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. ஒருவேளை அதே சூத்திரத்தை அரசு பின்பற்ற முடிவு செய்தால், அகவிலைப்படி (DA) 60 சதவீதத்தை எட்டுவது புதிய ஊதிய நிர்ணயத்திற்கு ஒரு முக்கிய அடிப்படையாக அமையும்.
2025-ஆம் ஆண்டின் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (AICPI-IW) தரவுகளின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2026 ஜனவரி 1 முதல் 60 சதவீதமாக உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 7-வது ஊதியக் குழுவின் விதிகளின்படி, ஊதியக் குழு அமல்படுத்தப்படும் தேதியில் உள்ள அகவிலைப்படி விகிதமே ஃபிட்மென்ட் ஃபேக்டரைக் கணக்கிட அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த வகையில், 2026 ஜனவரியில் நிலவும் 60% அகவிலைப்படி, புதிய ஊதிய உயர்விற்கான அஸ்திவாரமாக அமைய வாய்ப்புள்ளது.
7-வது ஊதியக் குழுவின் நடைமுறை: ஒரு பார்வை
முந்தைய 7-வது ஊதியக் குழு எவ்வாறு ஊதியத்தை நிர்ணயித்தது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். அப்போது குறைந்தபட்ச அடிப்படை ஊதியமாக ₹18,000 நிர்ணயிக்கப்பட்டது. இது 6-வது ஊதியக் குழுவின் தொடக்க ஊதியமான ₹7,000 உடன் 2.57 என்ற 'ஃபிட்மென்ட் ஃபேக்டரை' பெருக்கிப் பெறப்பட்ட தொகையாகும்.
8-வது ஊதியக் குழு- இந்த 2.57 என்ற காரணி எவ்வாறு வந்தது?
2016-இல் ஊதியக் குழு அமல்படுத்தப்பட்ட போது, அகவிலைப்படி 125 சதவீதத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டது. இந்த 125% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பதற்காக (DA Neutralisation) 2.25 என்ற காரணி பயன்படுத்தப்பட்டது. இதனுடன் பிற படிகளையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 2.57 என்ற ஃபிட்மென்ட் ஃபேக்டர் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் சமமாக வழங்கப்பட்டது.
ஒருவேளை 8-வது ஊதியக் குழுவும் இதே தர்க்கத்தைப் பின்பற்றினால், 2026-இல் எதிர்பார்க்கப்படும் 60% அகவிலைப்படி புதிய ஊதிய மாற்றத்தின் மையப்புள்ளியாக இருக்கும். விலைவாசி உயர்வு மற்றும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இந்த முறை ஃபிட்மென்ட் ஃபேக்டர் எவ்வளவு இருக்கும் என்பதை அறிய ஊழியர்கள் ஆர்வமாக உள்ளனர். இப்போது தொடங்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளம், இந்த அடுத்த பத்தாண்டிற்கான ஊதிய மாற்றத்தின் முதல் படியாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications