பாஜக ஆதரவு தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 9 பேர் டெல்லி விரைவு.. சிறப்பு விமானத்தில் பறந்தனர்
டெல்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 9 அதிருப்தி எம்எல்ஏக்கள், சிறப்பு விமானம் மூலம், டெல்லி அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் அஜித் பவார் தலைமையில், தனியாக செயல்படும் இந்த எம்எல்ஏக்கள் பாஜக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்த நிலையில், திடீரென சிறப்பு குட்டி விமானத்தில் டெல்லி அழைத்துச் செல்லப்பட்டனர். பாஜகதான் இதற்கான ஏற்பாடுகளை செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

எம்எல்ஏக்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதை தவிர்க்க பாஜக இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனிடையே, அஜித் பவாருடன், சென்ற 7 எம்எல்ஏக்கள் மீண்டும் 'தாய்க்கழகம்' திரும்பியுள்ளனர். அதாவது, சரத்பவார் பக்கமே திரும்பியுள்ளனர்.
தங்களை நம்ப வைத்து, அஜித் பவார் ஏமாற்றி கூட்டிச் சென்றதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதிருப்தியாளர்களாக அறியப்பட்ட சில எம்எல்ஏக்கள் சரத்பவார் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். சரத்பவார் பக்கம் அதிக எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் அடுத்துவரும் நாட்கள் மிகுந்த முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில், 145 எம்எல்ஏக்கள் பலம் இருந்தால்தான் ஆட்சியமைக்க முடியும். பாஜகவிடம் இருப்பது 105 மட்டுமே. இதைதவிர, 9 அதிருப்தி எம்எல்ஏக்கள், 11 சுயேச்சைகள் என கூட்டி பார்த்தாலும், 125-ஐ தாண்டாது.
இதனிடையே, மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், என்சிபி எம்.பி. சுனில் தட்கரே மற்றும் என்சிபி எம்எல்ஏக்கள் திலீப் வால்ஸ் பாட்டீல் மற்றும் ஹசன் முஷ்ரிப் ஆகியோருடன் அவரது சகோதரர் ஸ்ரீனிவாஸ் பவாரின் இல்லத்தில் வைத்து ஆலோசனை நடத்தினார். கட்சியில் தனக்கு இருக்கும் பலத்தை காண்பிக்க அவர் எடுத்த முயற்சி இது என பார்க்கப்படுகிறது.
மற்றொரு பக்கம், சிவசேனா எம்.எல்.ஏ.க்களை லலித் ஹோட்டலில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவர்கள் ரிசார்ட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications