வரலாற்றில் முதல் முறை.. மத்திய பிரதேச உள்ளாட்சி தேர்தலில் பாஜக முஸ்லிம் வேட்பாளர்கள் அதிக வெற்றி!
டெல்லி: மத்திய பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் முதல் முறையாக பாஜக சார்பில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளனர். பல இடங்களில் காங்கிரஸ் கட்சியின் முஸ்லிம் வேட்பாளர்களை பாஜகவின் முஸ்லிம் வேட்பாளர்கள் தோற்கடித்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார். இந்நிலையில் மாநிலத்தில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. மத்திய பிரதேசத்தில் மொத்தம் 40 மாநகராட்சிகள் உள்ளன. 169 நகராட்சிகள் உள்ளன. இதற்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கட்சியினர் தேர்தல் பணியை மும்முரமாக துவங்கினர்.
மத்திய பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுவது மற்றும் 2024ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால் உள்ளாட்சி அளவில் கட்சியை பலப்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. இதனால் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளாட்சி தேர்தலில் அதிக கவனம் செலுத்தின.
தர்ணாவில் சிக்கன் சாப்பிட்ட எம்பிக்கள்? காந்தியை அவமதித்ததாக சாடிய பாஜக! திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி
பாஜக அசத்தல் வெற்றி
இந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இதில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதில் மொத்தமுள்ள 40 மாநகராட்சிகளில் 24 மாநகராட்சிகளையும், 169 நகராட்சிகளில் 123 நகராட்சிகளையும் பாஜக கைப்பற்றியுள்ளது. மொத்தம் பாஜக சார்பில் 6,671 பேர் கவுன்சிலர்களாக வெற்றி பெற்றுள்ளனர். இதனால் பாஜக மகிழ்ச்சி அடைந்துள்ளது.
பாஜக முஸ்லிம் வேட்பாளர்கள் அதிக வெற்றி
மேலும் இந்த தேர்தலில் பாஜக சார்பில் 92 பேர் முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மொத்தம் 380 முஸ்லிம்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் 92 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதன்மூலம் மத்திய பிரதேச வரலாற்றில் உள்ளாட்சியில் பாஜக சார்பில் அதிகளவில் முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு கடந்த 2014ல் பாஜக சார்பில் 50க்கும் குறைந்த அளவில் மட்டுமே முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர்.
காங்கிரஸ் கோட்டையிலும் வெற்றி
மேலும் காங்கிரசின் கோட்டையாகக் கருதப்பட்ட வார்டுகளில் பாஜகவின் முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. குறைந்தது 25 வார்டுகளில் இந்துக்களாக நிறுத்தப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர்களை பாஜகவின் முஸ்லிம் வேட்பாளர்கள் தோற்கடித்துள்ளனர். அதோடு பாஜகவின் முஸ்லிம் வேட்பாளர்கள் 209 வார்டுகளில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் கூட 2வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளனர்.
பாஜக நம்பிக்கை
குறிப்பாக அனுப்பூரில் காங்கிரஸ் கட்சியின் அசோக் திரிபாதியை பாஜகவின் அப்துல் கலாம் தோற்கடித்தார். காட்னியில் பாஜகவின் முகமது அயாஸ், காங்கிரஸ் வேட்பாளர் மோகன்லாலை தோற்கடித்தார். மேலும் உஜ்ஜயினியில் காங்கிரஸின் வைஷாலி, பாஜகவின் அபிதா பியாலால் தோற்கடிக்கப்பட்டார். இதனால் வரும் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு முஸ்லிம் மக்கள் கைக்கொடுப்பார்கள் என கட்சி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தொடரும் குற்றச்சாட்டு
இருப்பினும் உள்ளாட்சி தேர்தலில் மத்திய பிரதேசத்தில் சிறிய நகரங்களில் உள்ள வார்டுகளில் மட்டுமே பாஜக சார்பில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. போபால், இந்தூர், ஜபல்பூர் உள்ளிட்ட நகரங்களில் முஸ்லிம்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
காங்கிரஸ் நிலவரம் என்ன?
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மத்திய பிரதேசத்தின் மொத்த மக்கள் தொகையில் 6.57 சதவீதம் பேர் முஸ்லிம்களாக உள்ளனர். இதனால் காங்கிரஸ் சார்பில் அனைத்து வகை தேர்தல்களிலும் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். இதற்கு முன்பு கடந்த 2014 உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் 400 முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது அது அதிகரித்தது. இந்த முறை காங்கிரஸ் சார்பில் மொத்தம் 450 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 344 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
அரசியல் மாற்றம்
மத்திய பிரதேச உள்ளாட்சி தேர்தல் குறித்து பாஜகவின் மாநில செய்தி தொடர்பாளர் ஹிதேஹ் வாய்பாய் கூறுகையில், ‛‛இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் அனைத்து சமூகங்களையும் இணைக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிக்கு இது ஒரு சிறந்த வெற்றியாகும். முஸ்லிம்கள் எங்களுக்க செலுத்திய வாக்கு என்பது எங்களின் கொள்கையான சப்கா சாத், சப்கா விகாஸ் (அனைவரின் ஆதரவு, அனைவரின் வளர்ச்சி) மீது அவர்கள் வைத்த நம்பிக்கையை காட்டுகிறது. எங்கள் முஸ்லிம் வேட்பாளர்கள் காங்கிரஸின் இந்து வேட்பாளர்களை தோற்கடித்தது என்பது மாநில அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை வெளிப்படுத்துகிறது'' என்றார்.
வெற்றியின் ரகசியம் என்ன?
இதுபற்றி பாஜக சிறுபான்மை பிரிவின் மாநில தலைவர் ரபத் வார்சி கூறுகையில், ‛‛பாஜக சார்பில் உள்ளாட்சி தேர்தல்களில் முஸ்லிம் வேட்பாளர்களை அதிகளவில் களமிறக்குவதற்கான முன் நடவடிக்கை இது. பாஜக பெரிய அளவில் முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கியது இதுதான் முதல் முறை. உள்ளாட்சி தேர்தல் என்பது சட்டசபை தேர்தலில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதால் முஸ்லிம் மற்றும் இந்து வாக்குகளை பெறுவதில் ஒருசேர பெற நாங்கள் வகுத்த திட்டங்கள் திறம்பட கைக்கொடுத்துள்ளது. இந்த தேர்தல் முடிவு என்பது முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்கத் தயாராக உள்ளனர் என்பதை காட்டுகிறது. பெரும்பலானா வார்டுகளில் 2 ஆயிரம் முதல் 3 பேர் வாக்காளர்களாக உள்ளனர். நாங்கள் இந்துக்களின் ஓட்டுக்களை நிச்சயம் பெறுவோம் என்ற நிலையில் முஸ்லிம்களின் ஓட்டுக்களை கணிசமாக பிரித்தால் வெற்றி பெறலாம் என நினைத்து வேட்பாளர்களை நிறுத்தி வாகை சூடி உள்ளோம்'' என்றார்.
Recommended Video
சட்டசபை தேர்தலில் எதிரொலிக்குமா?
கந்த்வா பாஜக மாவட்ட தலைவர் சேவா தாஸ் படேல் கூறுகையில், "நாங்கள் 9 முஸ்லிம் வேட்பாளர்களுக்கு டிக்கெட் கொடுத்தோம். இதில் 2 பெண்கள் உள்பட 4 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இந்த 4 வார்டுகளிலும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும் முஸ்லிமாக இருந்தாலும் கூட எங்களின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்'' என்றார். இதுபற்றி பெயர் குறிப்பிட விரும்பாத இன்னொரு தலைவர் கூறும்போது, ‛‛உள்ளாட்சி தேர்தலில் முஸ்லிம்கள் அதிகமுள்ள வார்டுகளில் முஸ்லிம்களை பாஜக சார்பில் நிறுத்தி பெற்றி பெறுவது சிறந்த உத்தியாக இருந்தாலும் கூட சட்டசபை தொகுதி என்பது மிகப்பெரியதானது. எனவே இந்த வகை உத்தியை சட்டசபை தேர்தலில் பின்பற்ற முடியாது. வார்டுகளைப் போல் அல்லாமல், ஐந்து லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ள பெரிய தொகுதிகளில், முஸ்லிம் வாக்குகளைப் பிரித்து வெற்றி பெறுவது மிகவும் கடினம்" என்று தலைவர் கூறினார். இருப்பினும் இதேபோல் சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என பாஜக சிறுபான்மை பிரிவின் மாநில தலைவர் ரபத் வார்சி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.