டெலிகிராமில் லீக்கான நீட் முதுநிலை தேர்வு வினாத்தாள்? தேர்வை ஒத்திவைக்க கோரிய வழக்கு இன்று விசாரணை
டெல்லி: நீட் தேர்வு குறித்து ஏராளமான சர்ச்சைகள் நீண்டு வரும் நிலையில், வரும் 11ம் தேதி நடைபெற உள்ள நீட் முதுநிலை தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனு மீதான விசாரணை இன்று தொடங்குகிறது.
இந்த ஆண்டு, இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை, கடந்த மே 5-ஆம் தேதி நடத்தியது. நாடு முழுவதும் 4,750 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் 4ம் தேதியே முடிவுகள் வெளியாகின.

இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெற்ற அன்றே வினாத்தாள் கசிந்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இது ஒன்றும் புதிதல்ல. கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த தேர்வில் முறைகேடு செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டார்கள். 2020-ஆம் ஆண்டு நடந்த தேர்வில் முறைகேடு செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டார்கள். 2021-ஆம் ஆண்டு தேர்வில் 15 பேர் முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டார்கள்.
நீட் தேர்வு என்பது, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என்று நான்கு பாடப்பிரிவுகளில் இருந்து 45 கேள்விகள் வீதம் 180 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்கள் கிடைக்கும். ஒரு கேள்விக்கு தவறாக பதில் அளித்தால் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். ஒரு கேள்விக்கு பதில் அளிக்காமல் விட்டிருந்தால் 716 மதிப்பெண்கள் கிடைக்கும்.
ஒரு கேள்விக்கு மட்டும் தவறாக பதில் அளித்திருந்தால் அவருக்கு 179 கேள்விகளுக்கான 716 மதிப்பெண்களில் ஒரு மதிப்பெண் குறைக்கப்பட்டு 715 மதிப்பெண்கள் பெறலாம். இப்படி இருக்க, சில மாணவர்கள் 719 மற்றும் 718 மதிப்பெண்ணும் பெற்றிருந்தனர். நீட் தேர்வு மதிப்பீட்டு முறைப்படி இந்த மதிப்பெண்களை எந்த மாணவரும் பெறவே முடியாது. எனவே இந்த தேர்வில், ஒருவர் பெறுவதற்கு சாத்தியமில்லாத மதிப்பெண்களை சில மாணவர்கள் பெற்றிருந்தது பலருக்கு சந்தேகத்தை எழுப்பியது.
இளங்கலை தேர்வில் இப்படியான குளறுபடிகள் இருந்த நிலையில், முதுகலை தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 2024-25-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் முதுகலை தேர்வுஆக.11-ம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தில் எம்பிபிஎஸ் முடித்த 25 ஆயிரம் மருத்துவர்கள் உட்படநாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதவுள்ளனர்.
இப்படி இருக்கையில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் விற்பனைக்கு உள்ளதாக சமூக வலைதளமான டெலிகிராமில் தகவல் பரவி வருகிறது. டெலிகிராமில் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட 'PG NEET leaked material' என்ற குழுவில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் ரூ.70 ஆயிரத்துக்கு கிடைப்பதாகவும், வினாத்தாள் வேண்டும் என்றால் ரூ.35 ஆயிரம் பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளவும் என்று தகவல் பரவி வருகிறது.
ஆனால் இதற்கு மத்திய அமைச்சர் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இப்படியாக வதந்திகளை பரப்பியவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சூழலில்தான் நீட் முதுநிலை தேர்வின் வினாத்தாள் லீக்காகியுள்ளது. எனவே தேர்வை ரத்து செய்யுங்கள் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனு மீதான விசாரணை இன்று தொடங்குகிறது.












Click it and Unblock the Notifications