ஆ.ராசா, திருமா, பீட்டர் அல்போன்ஸ்.. யாருமே சனாதனம் பற்றி பேசவே கூடாதாம்- சுப்ரீம் கோர்ட்டில் மனு
டெல்லி: தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மட்டுமல்ல.. திமுக எம்பி ஆ.ராசா, விசிக தலைவர் தொல். திருமாவளவன், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் சனாதன தர்மத்தை எதிர்த்தோ இந்துமதத்தை விமர்சித்தோ பேச கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என வாதிடப்படது.
சென்னையில் செப்டம்பர் 2-ந் தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இம்மாநாட்டில் தலைப்பை வலியுறுத்தி பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு , மலேரியா, காலரா போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றார். உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

உதயநிதிக்கு நோட்டீஸ்: உச்சநீதிமன்றத்திலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது.
இது என்ன காவல் நிலையமா?: உச்சநீதிமன்றத்தில் உதயநிதிக்கு எதிராக ஜெகந்நாத் என்பவரும் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிருத்தா போஸ், திரிவேதி பெஞ்ச், ஏன் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகக் கூடாது என கேள்வி எழுப்பினர். அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு தனிநபர் மதத்துக்கு எதிராக பேசவில்லை. மாநில அரசின் அமைச்சர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர் என வாதிட்டனர். அப்போது, உச்சநீதிமன்றத்தை நீங்கள் காவல் நிலையமாக மாற்றுகிறீர்களா? என மனுதாரரை நீதிபதிகள் கண்டித்தனர்.

ஆ.ராசா, திருமாவுக்கும் தடை வேணுமாம்: மேலும் மனுதாரர் ஜெகந்நாத் தமது மனுவில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா, தொல்.திருமாவளவன், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் அவரது ஆதரவாளர்களும் சனாதன தர்மம் அல்லது இந்து மதத்துக்கு எதிராக பேச தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருக்கிறார். அத்துடன் செப்டம்பர் 2-ந் தேதி சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
பள்ளிகளுக்கும் தடை வேண்டும்: அத்துடன் ஹிஜாப் வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாட்டில் எந்த ஒரு பள்ளியிலும் இந்து தர்மத்துக்கு எதிரான மாநாடுகள் நடத்த தடை விதிக்க வேண்டும் எனவும் அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications