"வந்தே மாதரம் பாடலை பயன்படுத்தி.. பாகுபாட்டை உருவாக்கினார்கள்!" - ஆ.ராசா சாடல்
டெல்லி: வந்தே மாதரம் சிறப்பு விவாதத்தில் பங்கேற்றிருந்த திமுக எம்பி ஆ.ராசா, "இந்தியாவில்தான் தேசிய கீதம், தேசிய பாடல் என தனித்தனியாக இருக்கின்றன. தேசிய கீதம் நமது நாட்டை ஒருங்கிணைக்கிறது. பிளவுபட்டிருந்த நாட்டை ஒருங்கிணைக்க தேசிய கீதம் அவசியம். ஆனால் தேசிய பாடலான வந்தே மாதரம், நமது சுதந்திரத்தை பற்றியது, அதன் தாக்கத்தை பற்றியது.வந்தே மாதரம் பாடலை பயன்படுத்தி பாகுபாட்டை உருவாக்கினார்கள்" என்று பேசியுள்ளார்.

நாட்டின் தேசிய பாடலான வந்தே மாதரம் இயற்றப்பட்டதன் 150 ஆவது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற மக்களவையில் 10 மணி வரை சிறப்பு விவாதத்தை இன்று மதியம் 12 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அவர் காங்கிரஸ் மற்றும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை கடுமையாக விமர்சித்தார். முஸ்லிம் லீக்-க்கு காங்கிரஸ் அடிபணிந்துவிட்டதாகவும், தேசிய பாடலை துண்டு துண்டாகப் பிரித்துவிட்டது என்றும் அவர் குற்றம்சாட்டினார். வந்தே மாதரம் பாடலை முஸ்லீம் லீக் கட்சி எதிர்த்தது. எனவே, இந்த பாடல் இஸ்லாமியர்களை எரிச்சலடைய செய்யலாம் என்று கருதிய நேரு, பாடலை தேசிய கீதமாக ஆக்கவில்லை என்றும் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் ராசா பேசும்போது, "வந்தே மாதரம் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கு எதிராகவும் இயக்கப்பட்டது என்று முடிவு செய்வதற்கு வரலாற்றில் காரணங்கள் உள்ளன. சுதேசி போராட்டத்தில் பங்கேற்கக்கூடாது என்று இஸ்லாமியர்கள் தடுக்கப்பட்டார்கள். வகுப்புவாதம் இஸ்லாமியர்களால் தூண்டப்படவில்லை. பிரிவினை குறித்து கூறும் பிரதமர், அது எங்கே? யாரிடம் உள்ளது என்பதை பற்றி விளக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications