கட்டாய கல்வி திட்டத்தில் அதிரடி மாற்றம்.! அங்கன்வாடிகளை ஆரம்ப பள்ளிகளுடன் இணைக்க திட்டம்
டெல்லி: நாட்டிலுள்ள குழந்தைகளுக்கு இனி மூன்று வயதில் இருந்தே கட்டாய கல்வி திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக பள்ளிகளுடன் அங்கன்வாடி மையங்களையும் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 5 வயதில் இருந்து கட்டாயக் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. இதனை மாற்றியமைத்து மூன்று வயதில் இருந்தே கட்டாய கல்வியை அமல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வரைவு அறிக்கையை தயார் செய்யதுள்ளது. அதன்படி பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை நேரடியாக கவனித்து வந்த அங்கன்வாடிகளை, இனி மனிதவள மேம்பாட்டுத்துறை இணைந்து கவனிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 3 வயதில் இருந்தே கட்டாய கல்வி கற்று கொடுக்கும் திட்டம் கொண்டு வரப்படும். தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு சரை கல்வி உரிமை சட்டம் உள்ளது. இனி அது 3 வயது முதல் 12-ம் வகுப்பு வரை அமல்படுத்தப்படும். அங்கன்வாடியில் 3 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள் தற்போது கவனித்து கொள்ளப்படுகிறார்கள்.
தற்போது அமல்படுத்த முடிவு செய்துள்ள திட்டத்தின்படி இனி, அங்கன்வாடிகளில் 3 வயது முதல் 8-ம் வகுப்பு வரை கவனித்து கொள்ளப்படுவார்கள். இதற்காக ஆங்காங்கே உள்ள அங்கன்வாடிகள், அந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப பள்ளிகளுடன் இணைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
அதாவது ஆரம்ப பள்ளிகளின் ஒரு அங்கமாக அங்கன்வாடிகள் இனி செயல்படும். அங்கன்வாடிககளில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு மற்றும் மதிய உணவு இதுவரை வழங்கப்பட்டு வந்தது. புதிய திட்டத்தை அமல்படுத்தி அங்கன்வாடிகளில் இனி காலை உணவையும் சேர்த்து வழங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது அங்கன்வாடிகளில் பெயரளவுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. தற்போது அங்கன்வாடி குழந்தைகளுக்காக புதிய பாடமுறை திட்டம் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி விளையாட்டுடன் கூடிய கண்டுபிடிப்பு கல்வி முறையை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் 3 வயதில் இருந்தே கல்வி கற்கும் திறன் குழந்தைகளுக்கு அதிகரிக்கும். மேலும் பல மொழிகளை கற்றுக் கொடுக்கும் திட்டமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, குழந்தைகளை வித்தியாசமான முறையில் கவனித்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications