பாரத் பந்த்.. டிசம்பர் 30ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம்.. அழைப்பு விடுத்த ஆதிவாசிகள்
டெல்லி: சர்ணாவை தனி மதமாக அங்கீகரித்திட வலியுறுத்தி ஆதிவாசி செங்கல் அபியான் என்ற அமைப்பு டிசம்பர் 30 ஆம் தேதி நாடு தழுவிய அடையாள முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்து இருக்கிறது.
இந்தியாவில் வாழும் பல கோடிக்கணக்கான பழங்குடி மக்கள் தங்களுக்கென்று தனித்துவமான வழிபாடுகளை கொண்டு உள்ளனர். இதன் சடங்கு சம்பிரதாயங்கள் இங்கு பின்பற்றப்படும் அங்கீகரிக்கப்பட்ட மதங்களுடன் வேறுபட்டவையாக உள்ளன. இந்த நிலையில் பழங்குடியினரால் பின்பற்றப்படும் சர்ணாவை மதமாக அறிவிக்க வேண்டும் என்பது பல ஆண்டுகால கோரிக்கையாக இருந்து வருகிறது. இதனை நிறைவேற்ற வலியுறுத்தி ஆதிவாசி செங்கல் அபியான் (ஏ.எஸ்.ஏ) அமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது.

இந்த அமைப்பின் தலைவராக உள்ள சல்கான் முர்மு இது குறித்து பேசுகையில், "சர்ணா மதம் நாட்டில் உள்ள 15 கோடி பழங்குடி மக்களின் அடையாளத்தை பிரதிபலிக்கிறது. பழங்குடி சமூகத்தின் மதத்தை அங்கீகரிக்க மறுப்பதே அரசியலமைப்பு சட்டப்படி குற்றமாகும். பிற மதங்களைத் பின்பற்ற பழங்குடி சமூகத்தை கட்டாயப்படுத்துவது மதத்தின் மூலம் அடிமைப்படுத்தப்படுவதற்கு சமமாகும். காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய 2 கட்சிகளும் பழங்குடிகளின் மத சுதந்திரத்தை குறைத்து மதிப்பிட்டு வருகின்றன.
1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் சர்ணா மதத்திற்கு தனித்தனியாக குறியீடு இருந்தது. பின்னர் காங்கிரஸ் கட்சி அதை நீக்கியது. பழங்குடி மக்களை காட்டு வாசிகளாகவும் இந்துக்களாகவும் வகைப்படுத்த பாஜக முயற்சிகிறது. பழங்குடி சமூக மக்களின் நலன்களை பாதுகாப்பதில் ஏ.எஸ்.ஏ உறுதியாக உள்ளது. சர்ணா மதத்தை அங்கீகரிக்கும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவு தர நாங்கள் தயாராக உள்ளோம். பழங்குடி சமூகங்களின் பாரம்பரிய மத நம்பிக்கையான சர்ணா மலைகள், காடுகள் மற்றும் வனவிலங்குகள் போன்ற இயற்கை அம்சங்களையே முதலில் வணங்க சொல்கிறது.
சர்ணா மதத்திற்கு மக்கள் தொகை மதக் குறியீட்டில் தனி பிரிவு இருக்க வேண்டும் என்று பட்டியலின ஆணையம் முன்மொழிந்தது. பல பழங்குடி குழுக்களும் கிறிஸ்துவ மிஷனரிகளும் சர்ணாவிற்கு தனி மக்கள் தொகை குறியீடு வழங்குவதை ஆதரிக்கின்றன. கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில், சுமார் 50 லட்சம் பழங்குடி மக்கள் தங்கள் மதத்தை 'சர்ணா' என்று குறிப்பிட்டு உள்ளனர். இது ஜெயின் மதத்தின் 44 லட்சத்தைவிட அதிகம். ஜெயின் மதத்திற்கு தனி மத அந்தஸ்து கிடைத்த நிலையில், சர்ணா மதத்திற்கு அந்த அங்கீகாரம் மறுக்கப்பட்டு வருகிறது.
பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் பிறப்பிடமான உலிஹாதுவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தபோதும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒடிசாவில் உள்ள பாரிபடாவுக்கு வருகை தந்தபோதும் சர்ணா மதத்திற்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக எதுவுமே சொல்லவில்லை. எனவே நாங்கள் வேறு எங்களுக்கு வழி இன்றி, டிசம்பர் 30 ஆம் தேதி அடையாள பாரத் பந்த் போராட்டத்தை நடத்த முடிவு செய்து உள்ளோம்.
அமைப்புகளின் துணையுடன், சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டங்களை முன்னெடுக்கவும் பழங்குடியின மக்கள் திட்டமிட்டுள்ளனர். ஜார்க்கண்ட் சட்டசபையில் சர்ணா மதக் குறியீடு மசோதாவை ஆதரித்த அரசியல் கட்சிகள் தங்களின் கோரிக்கைக்கு ஆதரவு அளிக்க வேண்டும்." என்றார். 2020 நவம்பரில் ஜார்க்கண்ட் சட்டசபை ஏற்கனவே சர்ணா மதத்தை தனி மதமாக அங்கீகரிப்பதை ஆதரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications