சீனியர்களுக்கு "ஓய்வு" கொடுக்கும் கட்சிகள்.. அத்வானி, ஜோஷி வரிசையில் ஓரங்கட்டப்பட்ட முலாயம்சிங்!
டெல்லி: கட்சியின் வழிகாட்டிகளாக உள்ள சீனியர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுக்கும் பட்டியலில் அத்வானி, ஜோஷி வரிசையில் முலாயம்சிங்கும் தற்போது வந்துள்ளார்.
ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கு அரசியல் சாணக்கியத்தனம் தெரிந்த ஒருவர் இருப்பது எத்தனை நன்மை என்பது அந்தந்த கட்சிகளின் வளர்ச்சியை பார்த்தால் தெரியும்.
அந்த வகையில் பாஜகவை வளர்த்த பெருமை வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோரை சேரும். கட்சியின் நலனுக்காக ஓய்வின்றி உழைத்தவர்கள் இவர்கள். பாஜகவுக்கு மக்கள் மனதில் நற்பெயர் கிடைத்ததற்கு வாஜ்பாயும் ஒருகாரணம் ஆவார்.

விமர்சனம்
இந்த நிலையில் திரிபுரா மாநில முதல்வரின் பதவியேற்பு விழாவுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை எல் கே அத்வானி கும்பிட்ட போது அவரை கண்டுக்கொள்ளாமல் மோடி சென்றார். இது சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனங்களுக்குள்ளானது.

காந்தி நகர்
குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் 6 முறை தொடர்ந்து வெற்றி கண்டவர். என்னதான் அவர் வயோதிகராக இருந்தாலும் மக்கள் அவரது பணிகளை விரும்பித்தான் வாக்களித்து வெற்றி பெற செய்தனர். ஆனால் பாஜகவோ 75 வயதுக்கு மேற்பட்டவர்களை ஓரங்கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

அசாம்கார்
இதுபோல்தான் முரளி மனோகர் ஜோஷியும் ஓரங்கட்டப்பட்டுவிட்டார். தற்போது இந்த வரிசையில் முலாயம் சிங்கும் வந்துவிட்டார். அவர் வழக்கமாக போட்டியிடும் அசாம்கார் தொகுதியில் அவரது மகன் அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார்.

பெரும் பாடு
சரி போட்டியிடத்தான் வாய்ப்பில்லை. முலாயம் பிரசாரமாவது செய்வாரா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெறவில்லை. அகிலேஷ் யாதவ் உயரவும், சமாஜ்வாதி கட்சி முன்னேறவும் முலாயம் சிங் பெரும் பாடுபட்டிருப்பார்.

இந்திய அரசியல்
இது போல் கட்சிக்கும் கட்சியின் வளர்ச்சிக்கும் வழிகாட்டியாக இருந்தவர்கள் இன்று கறிவேப்பிலை போல் தூக்கி எறியும் நிலை வந்துவிட்டது. குறைந்தபட்சம் சீட் வழங்காவிட்டாலும் பிரசாரம் செய்யவாவது இவர்களை அனுமதித்திருக்கலாம். இந்திய அரசியலின் பீஷ்மர் என வர்ணிக்கப்பட்டவர் அத்வானி. அவருக்கே இந்த நிலை என்றால் உழைக்காமல் கட்சி பணத்தை சுரண்டும் நோக்கில் உள்ளவர்களின் நிலை என்னவாகும் என்பதே கேள்வி.












Click it and Unblock the Notifications