லைவ் வீடியோ.. அயோத்தி ராமர் கோவிலை இடிப்பதாக மிரட்டல்.. பிஎப்ஐயை சேர்ந்த 3 பேரிடம் என்ஐஏ விசாரணை!
டெல்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவிலை இடித்து மீண்டும் பாபர் மசூதி கட்ட உள்ளதாக பேஸ்புக்கில் லைவ் வீடியோ வெளியிடப்பட்டது. இதுபற்றி விசாரணை நடத்திய என்ஐஏ அதிகாரிகள் பீகாரில் 3 பிஎப்ஐ அமைப்பினரை பிடித்து ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 110 ஏக்கரில் மொத்தம் ரூ.1000 கோடி செலவில் பிரமாண்டமாக கோவில் எழுப்ப முடிவு செய்யப்பட்டது.
2020ல் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். 2024ல் கோவிலின் முழு பணிகள் முடிக்கப்பட்டு தரிசனத்துக்காக திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அயோத்தி ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டுவோம்.. சூளுரையுடன் அல்குவைதா மிரட்டல்..வெளியான ஷாக் தகவல்
3 பேரிடம் விசாரணை
இந்நிலையில் தான் பீகார் மாநிலம் சாகியா சப் டிவிஷனில் உள்ள குயான்வான் கிராமத்தில் இன்று என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு அமைப்பினரும் அந்த மாநில போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி 3 பேரை பிடித்தனர். இவர்கள் தடை செய்யப்பட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதுபற்றி பாட்னாவில் தலைமையக கூடுதல் டிஜிபி கன்வார் கூறுகையில், ‛‛மத்திய விசாரணை அமைப்பு பீகார் போலீசாருடன் சேர்ந்து சோதனை நடத்தியது. பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம்'' என உறுதி செய்தார்.
காரணம் என்ன?
இருப்பினும் அவர்களை எதற்காக பிடித்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்பதை அந்த அதிகாரி கூற மறுத்துவிட்டார். இந்தியாவில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு கடந்த ஆண்டில் இருந்து 5 வருடங்களுக்கு தடை விதித்தது. இதையடுத்து தற்போது அந்த அமைப்பை சேர்ந்தவர்களை என்ஐஏ அதிகாரிகள் பிடித்து விசாரிப்பதால் பல கேள்விகள் எழுப்பினர். இந்நிலையில் தான் தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அயோத்தி கோவிலுக்கு மிரட்டல்
அதாவது சமீபத்தில் கடந்த ஜனவரி 31ம் தேதி பேஸ்புக்கில் உஸ்மான் என்பவர் லைவ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அயோத்தி ராமர் கோவிலை இடித்து மீண்டும் அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்படும் என அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அல்கொய்தா மிரட்டலை தொடர்ந்து
முன்னதாக சமீபத்தில் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலை இடித்துவிட்டு அதற்கு பதிலாக பாபர் மசூதி கட்டப்படும் என அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. இதுபற்றி அல்குவைதா பயங்கரவாத அமைப்பினர் பத்திரிகையான கஜ்வா - இ - ஹிந்தில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. மேலும் அந்த செய்தியில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் பெயரும் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.