அக்னிபாத் எதிர்ப்பு பற்றி எரிகிறது-பீகாரில் இன்றும் ரயில்களுக்கு தீ வைப்பு-மே.வங்கத்திலும் போராட்டம்
டெல்லி: மத்திய பாஜக அரசின் புதிய ராணுவ ஆட்சேர்ப்பு கொள்கையான அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. பீகாரில் இன்று 2-வது நாளாக ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. பீகாரில் ரயில் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் ரயில்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
Recommended Video
மத்திய பாஜக அரசானது புதிய ராணுவ ஆட்சேர்பு கொள்கையான அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ராணுவத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே பணி வழங்கப்படும். 4 ஆண்டுகள் பணிக்கு பின்னர் 80% பேர் ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்படுவர். மேலும் 4 ஆண்டுகளுக்குப் பின் 20% மட்டும் பேர் ராணுவப் பணியை தொடர முடியும். இந்த அக்னிபாத் திட்டம் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் ராணுவ செலவு குறையும். நாட்டின் பாதுகாப்பு படைகளின் செலவின குறைப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் அக்னிபாத் திட்டத்தின் மூலம் ராணுவ பணியில் சேர விரும்பும் இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பது எதிர்ப்பாளர்களின் கருத்து. மேலும் ராணுவ பணியில் இணைந்து கொள்வோருக்கான எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதும் அவர்களது குற்றச்சாட்டு.
இதனால் மத்திய அரசு, புதிய ராணுவ ஆட்சேர்ப்புக் கொள்கையான அக்னிபாத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வட இந்தியாவில் பீகார் மாநிலத்தில்தான் இளைஞர்கள், மாணவர்கள் தீவிரமான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். பீகாரில் பல இடங்களில் ரயில்கள் தீ வைக்கப்பட்டுள்ளன; ரயில் நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. பீகாரில் நேற்று 2 ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டன; இதனால் போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர்.
இன்றும் பீகாரில் போராட்டம் தொடருகிறது. பீகார் பிஹியா ரயில் நிலையத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் பீகாரில் லகிசராய், விக்ரம்ஷிலா எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தப்பட்டன. பீகாரின் சமஸ்திபூரில் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இன்று மாணவர்கள் சிலர் தீ வைத்தனர். இந்நிலையில் பீகார் ஆரா ரயில் நிலையம் சூறையாடப்பட்டது தொடர்பாக 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 650 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் உத்தரப்பிரதேசத்திலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஆக்ரா-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹரியானாவில் நேற்று அக்னிபாத் எதிர்ப்பு போராட்டத்தின் போது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. இதனால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனையடுத்து ஹரியானாவின் ஃபரிதாபாத் பால்பாகரில் இணையசேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதேபோல் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லியிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதேபோல் மேற்கு வங்கத்தில் சிலிகுரி உள்ளிட்ட இடங்களிலும் போராட்டம் வெடித்தது. சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
வட இந்தியாவை தொடர்ந்து தென்னிந்தியாவிலும் அக்னிபாத் போராட்டம் வலுவடைந்துள்ளது. தமிழகத்தின் வேலூரில் நேற்று அக்னிபாத் எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இன்று தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். செகந்திராபாத்தில் ரயில்கள் மீது மாணவர் காங்கிரசார் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.












Click it and Unblock the Notifications