அகமதாபாத் விபத்து.. டேக் ஆஃப் ஆன சில நொடிகளில் விழுந்து நொறுங்கிய விமானம்.. புது சிசிடிவி காட்சி
அகமதாபாத்: அகமதாபாத்தில் இருந்து இன்று லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI-171, புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், அகமதாபாத் விமான நிலைய சிசிடிவி கேமராவில் பதிவான அந்த அதிர்ச்சிகரமான வீடியோ காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா AI171 போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் இன்று பிற்பகல் 1.38 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டது. அடுத்த 9 மணி நேரத்தில் அந்த விமானம் லண்டன் சென்று இறங்க வேண்டியது. ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களில் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே இந்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.

சிசிடிவி காட்சிகள்
இந்த விபத்தில் 204 பேர் உயிரிழந்தனர் மற்றும் 41 பேர் காயமடைந்தனர். விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் உட்பட 242 பேர் இருந்தனர். அவர்களில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டன் நாட்டினர், ஒரு கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்ச்சுகல்லை சேர்ந்தவர்கள் ஆவர். இதில் ஒரே ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் விமானம் விபத்துக்குள்ளாகும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பதிவாகியிருந்த அந்த வீடியோவில், மதியம் 1.39 மணிக்கு, போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தின் 23-வது ஓடுபாதையில் வேகமா பறக்க ஆரம்பித்தது. விமானம் டேக் ஆன சில நொடிகளில் மேலே உயரே பறக்க முடியாமல் அப்படியே கீழே விழ தொடங்கியது.
625 மீட்டர் உயரத்தில்
சுமார் 625 மீட்டர் உயரத்தில் பறந்தபோது அப்படியே கீழே விழுந்து நொறுங்கியது. சுமார் 30 நொடிகளில், விமானம் விமான நிலையத்தைக் கடந்து, மேகன்நகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியது. இந்த விபத்து பேரழிவை ஏற்படுத்தியது. தீ கொழுந்துவிட்டு எரிந்தது, புகை சூழ்ந்து, கட்டிடத்தின் பாகங்கள் சுக்குநூறாகின. விபத்து நடந்த இடத்தில் விரைந்து சென்ற மீட்புக் குழுவினர், சிதறிய பாகங்களை அகற்றி, மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
விமானத்தின் உடைந்த பாகங்களுக்கு இடையே, 11A இருக்கையில், ரத்தக்காயங்களுடன் ஒரு பயணி உயிருடன் மீட்கப்பட்டார். அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் அழைத்து சென்றனர். காவல்துறை ஆணையர் ஜி.எஸ். மாலிக், ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியபோது, ஒருவரை உயிருடன் மீட்டதை உறுதிப்படுத்தினார். ஆனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் சரியாகத் தெரியவில்லை என்று கூறினார்.
இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம்
"நாங்கள் இன்னும் எதையும் உறுதியாகக் கூற முடியாது. விமானம் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது. இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம்" என்று அவர் தெரிவித்தார். இந்த விபத்தில் மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு நடத்தினார். தொடர்ந்து அங்கு காயமடைந்தவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.












Click it and Unblock the Notifications