"திமுக கொடுத்த நெருக்கடி" டெல்லியில் சட்ட வல்லுனர்களுடன் எடப்பாடி திடீரென ஆலோசனை
டெல்லி: டெல்லி சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனியார் நட்சத்திர விடுதியில் மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். டெண்டர் முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
நாடாளுமன்ற சிறப்புக்கூட்டம் பற்றிய பாஜக கூட்டணியின் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா உள்ளிட்டோரை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச இருக்கிறார்.

இன்று காலை டெல்லி வந்த எடப்பாடி பழனிசாமியை அதிமுக நிர்வாகிகள் வரவேற்றனர். டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, சட்ட வல்லுனர்கள், மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
டெண்டர் முறைகேடு வழக்கை மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடியை இந்த வழக்கு ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications