பட்ஜெட் உரையையே புறக்கணித்த தம்பிதுரை.. தெரியாது என்கிறார் எடப்பாடி.. முற்றுகிறதா மோதல்?
Recommended Video
டெல்லி: லோக்சபா துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவருமான தம்பிதுரை, நேற்றைய பட்ஜெட் உரையை புறக்கணித்துவிட்டது கவனம் ஈர்த்துள்ளது.
சமீபகாலமாக தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கருத்துக்களை முன் வைத்து வருபவர் தம்பிதுரை.
நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும், மோடி அரசின், உயர்ஜாதியினருக்கான 10 சதவீத, இட ஒதுக்கீடு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக குரல் கொடுத்து வருபவர்.
மோதல் காரணமா
இந்த நிலையில்தான், தம்பிதுரை நேற்று, லோக்சபா கூட்டத்தில் பங்கேற்கவில்லை. நிதியமைச்சர் (பொறுப்பு) பியூஷ் கோயல் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தபோது, தம்பிதுரை லோக்சபாவில் இல்லை. இந்த ஆட்சி காலத்தின் இறுதி பட்ஜெட் என்பதால் மிகுந்த சலுகை மழைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தம்பிதுரை அவைக்கு வராமல் இருந்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோனியா காந்தி இல்லை
ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைமை கொறடா ஜோதிராத்ய சிந்தியா ஆகிய முக்கியஸ்தர்களும் கூட, பட்ஜெட் உரையின்போது அவையில் இல்லை என்பதை கவனிக்க முடிந்தது. அதேநேரம், ராகுல் காந்தி அவையில் இருந்தார். அவரும் கூட சற்று தாமதமாகத்தான் அவைக்கு வந்தார்.
முதல்வர் பதில்
பட்ஜெட் தாக்கல் செய்யும்போது தம்பிதுரை, புறக்கணித்துவிட்டாரே என்று சேலத்தில் நேற்று நிருபர்களிடம் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தனக்கு அதுபற்றி தகவல் வரவில்லை என கூறிவிட்டார். பாஜக-அதிமுக கூட்டணிக்கு தம்பிதுரை, அன்வர்ராஜா போன்ற அதிமுக மூத்த தலைவர்கள் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், முதல்வரின் பதில் கவனிக்கத்தக்கதாக உள்ளது.
தம்பிதுரை கிண்டல்
இதனிடையே தம்பிதுரையிடம் நிருபர்கள், மத்திய பட்ஜெட் தொடர்பாக கருத்து கேட்டனர். அதற்கு அவர், கடந்த நான்கரை ஆண்டுகளாக இல்லாமல் இப்போதாவது மோடி அரசுக்கு ஏழைகள், விவசாயிகள் மீது அக்கறை வந்துள்ளதற்கு பாராட்டுகள் என சூசகமாக கேலி செய்வதைபோல ஒரு கருத்தை தெரிவித்தார்.