ஏர் இந்தியா.. விபத்து நடந்த நொடிகளில் என்ன நடந்தது! கருப்பு பெட்டியில் முக்கிய டேட்டா மீட்பு
டெல்லி: ஏர் இந்தியா விபத்தில் 275 பேர் உயிரிழந்த நிலையில், அதன் கருப்பு பெட்டியை ஆய்வு செய்வதில் சில பல சிக்கல்கள் இருந்தன. இதற்கிடையே அந்த தடைகளை எல்லாம் கடந்து இப்போது ஒரு வழியாகக் கருப்பு பெட்டியில் இருந்து டேட்டாவை டவுன்லோடு செய்துவிட்டனர். அதில் உள்ள டேட்டாவை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 12ம் தேதி நடந்த ஏர் இந்தியா விபத்து இந்திய விமானத்துறையில் கருப்பு நாள் என்றே சொல்லலாம். அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில நிமிடங்களிலேயே விபத்திற்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்தவர்களில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். மற்ற பயணிகள், விமானம் மோதிய கட்டிடத்தில் இருந்தவர்கள் என மொத்தம் 275 பேர் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கருப்பு பெட்டி
இதற்கிடையே விபத்து குறித்த காரணங்களைக் கண்டறியக் கருப்பு பெட்டியை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டன. விபத்துக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிந்து, விமானப் பாதுகாப்பை மேம்படுத்தவும், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் தடுக்கவும் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுவாக எந்த விபத்து நடந்தாலும் இதுபோல கருப்பு பெட்டிகள் ஆய்வு செய்யப்படும்.
இதற்கிடையே விமான விபத்து விசாரணைப் பணியகத்தின் ஆய்வகத்தில் கருப்பு பெட்டியில் பதிவான டேட்டா வெற்றிகரமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. விபத்து நடந்த உடனேயே கருப்பு பெட்டி மீட்கப்பட்டது. அது ஜூன் 24 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே நேற்று ஜூன் 25ம் தேதி அதில் இருந்து டேட்டா டவுன்லோடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே டேட்டா மீட்பு
இடையில் தீ விபத்து காரணமாகக் கருப்பு பெட்டி பலத்த சேதமடைந்ததால், டேட்டாவை மீட்கக் கருப்பு பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியானது. இருப்பினும், அது அமெரிக்காவுக்கு எல்லாம் அனுப்பப்படவில்லை. கருப்பு பெட்டி இன்னும் இந்தியாவில் தான் உள்ளது என்றும் வல்லுநர்கள் அதை ஆய்வு செய்து வருவதாகவும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு உறுதிப்படுத்தினார். இந்தச் சூழலில் டேட்டா வெற்றிகரமாக டவுன்லோடு செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதீத வெப்பம்
பொதுவாகவே கருப்பு பெட்டி மிக மோசமான சூழல்களையும் சமாளிக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு இருக்கும். ஆனால், ஏர் இந்தியா விபத்து நடந்த போது அங்கு வெப்பம் சுமார் 1,000 டிகிரி செல்சியஸை எட்டியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தொடக்கத்தில் அந்த டேட்டாவை மீட்பதில் சிக்கல் நிலவி இருக்கிறது.
ஏற்கனவே விபத்து நடந்த இரண்டு நாட்களில் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் (CVR) மற்றும் விமான தரவு பதிவு கருவி (FDR) மீட்டெடுக்கப்பட்டது. இப்போது இதர டேட்டாக்கள் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளன. வல்லுநர்கள் இது குறித்து விசாரணை நடத்தி வரும் சூழலில், விசாரணையை மூன்று மாதங்களில் முடிக்கப்படும் எனத் தெரிகிறது.
ஏன் முக்கியம்!
விபத்துக்கு என்ன காரணம், விபத்து ஏற்படுவதற்கு முன்பு என்ன நடந்தது என்பதைப் பற்றிய ஆழமான புரிதல்களைக் கருப்பு பெட்டியில் இருக்கும் டேட்டா வழங்கும் என்பதால் இது முக்கியமானதாக இருக்கிறது. இந்த விசாரணை முடிந்த பிறகே விபத்திற்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரிய வரும்.
அதேநேரம் முன்னாள் அமெரிக்கக் கடற்படை விமானி ஸ்டீவ் ஷீப்னர் இரட்டை இஞ்சின் பெய்லியர் காரணமாக விபத்து நடந்திருக்கும் எனக் கூறியுள்ளார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ராம் ஏர் டர்பைன் பயன்படுத்தப்பட்டது வீடியோவில் தெரிய வரும் நிலையில், விபத்திற்கு அது காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications