ஏர் இந்தியா விமானத்தில் நடு வானில் தகராறில் ஈடுபட்ட பயணி.. டெல்லியில் இறக்கி போலீசில் ஒப்படைப்பு!
டெல்லி: அமிர்தசரசில் இருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானம் தரையிறங்க இருந்த போது, பயணி ஒருவர் மற்றொரு பயணியுடன் வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ஏஐ 454 விமானம் வந்து கொண்டு இருந்தது. விமானம் தரையிறங்க இருந்த போது, ஒரு பயணி எழுந்து மற்றொரு பயணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தகாத வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியுள்ளார். இதனால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அந்தப் பயணி, விமான பணிப்பெண்ணிடம் புகார் தெரிவித்தார். பிசினஸ் கிளாஸ் இருக்கை தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த பயணிக்கு மாற்று இருக்கையை ஏற்பாடு செய்து கொடுத்தார். இதன் பிறகு நிலைமை அமைதியாகி, விமானம் டெல்லியில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
டெல்லி விமான நிலையத்தில், விமானம் தரையிறங்கியதும், வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணி, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications