தேசியவாத காங்கிரஸ் கட்சி பெயர், சின்னத்துக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் அஜித்பவார் கோஷ்டி மனு!
டெல்லி: தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சி பெயர் மற்றும் சின்னத்துக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் தலைமையிலான கோஷ்டி மனு கொடுத்துள்ளது.
மகாராஷ்டிராவில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) இரண்டாக உடைக்கப்பட்டுள்ளது. என்சிபி-யின் அஜித்பவார் உள்ளிட்ட 9 எம்.எல்.ஏக்கள் ஆளும் பாஜக அரசில் இணைந்துள்ளனர். அஜித் பவார் துணை முதல்வராகவும் இதர 8 பேர் அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இன்று சரத்பவார், அஜித் பவார் இரு கோஷ்டிகளும் தங்களது பலத்தைக் காட்ட ஆலோசனை கூட்டங்களை நடத்தி உள்ளன. அஜித்பவார் கோஷ்டி தங்களுக்கு 40 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறிய நிலையில் 30 எம்.எல்.ஏக்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர். ஆனால் சரத்பவார் கூட்டத்தில் 13 எம்.எல்.ஏக்கள்தான் பங்கேற்றனர். மகாராஷ்டிரா சட்டசபையில் என்சிபி கட்சிக்கு 53 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இன்றைய இரு கூட்டங்களில் பங்கேற்காத எம்.எல்.ஏக்கள் மதில்மேல் பூனைகளாக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் அஜித்பவார் கோஷ்டி ஒரு மனுவை கொடுத்துள்ளது. அதில், 40-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் எங்கள் பக்கம் உள்ளனர். நாங்கள்தான் உண்மையான என்சிபி. எங்களுக்கே கட்சியின் பெயர், சின்னத்தை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 40 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதங்களையும் அஜித்பவார் தரப்பு தாக்கல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேநேரத்தில் சரத்பவார் கோஷ்டியின் ஜெயந்த் பாட்டீல் ஒரு கேவியட் மனுவையும் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ளார்.அதில் அஜித்பவார் உட்பட 9 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகையால் அஜித்பவார் மனு மீது எந்த ஒரு முடிவையும் எங்களை கலந்து ஆலோசிக்காமல் எடுக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இருதரப்பும் தாக்கல் செய்த மனுக்கள், ஆவணங்களை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து முடிவை தெரிவிக்கும். ஏற்கனவே மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி இரண்டாக உடைந்து தேர்தல் ஆணையத்திடம் இருதரப்பும் போராடியது. பின்னர் உச்சநீதிமன்றத்துக்கும் இரு தரப்பும் சென்றது. கடைசியாக சிவசேனா பெயர், சின்னத்தை உத்தவ்தாக்கரே தரப்பு, ஏக்நாத் ஷிண்டே கோஷ்டியிடம் இழந்தது. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸும் அதே பாணியில் பிளவுபட்டு தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டிருப்பது மகாராஷ்டிரா அரசியலில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications