பாகிஸ்தானில் திரும்பிய பக்கமெல்லாம் அடி! உள்நாட்டில் பலுசிஸ்தானில் நடந்த தாக்குதலில் 7 வீரர்கள் பலி
டெல்லி: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா இப்போது 'ஆபரேஷன் சிந்தூர்' கீழ் பதிலடி கொடுத்துள்ளது. தீவிரவாத முகாம்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க பலுசிஸ்தான் அங்குள்ள பிரிவினைவாதிகள் நடத்திய தாக்குதலிலும் 7 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். கடந்த காலங்களில் நடந்த மோதல்களில் பாதுகாப்புப் படையினரே பாதிக்கப்படுவார்கள். ஆனால், இந்த முறை அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்தியா
சமீப காலங்களில் காஷ்மீரில் நடந்த தாக்குதல்களில் இது மிக மோசமானதாகக் கருதப்பட்டது. இதனால் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. ஏற்கனவே, சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம், விசா ரத்து, வான்வெளி மூடல் என இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தது. இருப்பினும், இந்தியா ராணுவ ரீதியாகப் பதிலடி தர வேண்டும் எனப் பலரும் தொடர்ந்து வலியுறுத்தினர்.
இந்தியா பதிலடி
இந்தச் சூழலில் தான் அதிகாலை 3 மணியளவில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தியப் பாதுகாப்புப் படை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்குள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உச்சத்திற்குப் போய் இருக்கிறது.
ஏழு ராணுவ வீரர்கள்
இது ஒரு பக்கம் இருக்க பாகிஸ்தான் ராணுவம் தனது சொந்த மாநிலத்திலேயே அடி வாங்கியுள்ளது. அதன் தென் மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது, வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில், ஏழு வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. சொந்த மாநிலத்திலேயே பாகிஸ்தான் ராணுவம் மீது எதிர்ப்பு அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது.
ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள இந்த பலுசிஸ்தான் மாகாணத்தில், பலுச் விடுதலைப் படை என்று சிலர் தனி நாடு கேட்டுப் போராடி வருகிறார்கள். இவர்கள் பாகிஸ்தான் ராணுவம் மீது அவ்வப்போது தாக்குதலையும் நடத்தி வருகிறார்கள். இந்தச் சூழலில் தான் நேற்று ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதில் 7 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
தொடரும் தாக்குதல்
பலுசிஸ்தான் மற்றும் அண்டை மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் ஆயுதமேந்திய குழுக்கள் தொடர்ச்சியாக பாகிஸ்தான் ராணுவம் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தாண்டு மட்டும் இந்தத் தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்தைக் குறிவைத்தே இந்தப் போராளி குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
முன்னதாக கடந்த மார்ச் மாதத்தில் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்குச் சென்று கொண்டிருந்தபோது 400க்கும் மேற்பட்ட பயணிகள் சென்ற ரயிலும் இதுபோலத் தான் கடத்தப்பட்டது. இதில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டனர், அவர்களிலும் பலர் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஆவர்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பதிலடியை ஆரம்பித்துள்ள நிலையில், மற்றொரு பக்கம் உள்நாட்டிலும் பாகிஸ்தான் அடி வாங்கி வருகிறது.












Click it and Unblock the Notifications