அத்துமீறி தாக்க வரும் பாகிஸ்தான்.. பிரதமர் மோடியுடன் அஜித் தோவல் அவசர ஆலோசனை.. பெரிய முடிவு?
டெல்லி: பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தியா பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது. இத்தகைய பரபரப்பான சூழலில் பிரதமர் மோடியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக லாகூரில் பதிலடி நடவடிக்கையை இந்தியா தொடங்கியுள்ள நிலையில், இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கியது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். குறிப்பாக மசூத் அசாரின், ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத இயக் கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் அதிகம் பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

மசூத் அசாரின் உறவினர்கள் 10 பேரும் தாக்குதல்களில் உயிர் இழந்து உள்ளனர். இது பாகிஸ்தானுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்கு பாகிஸ்தான் எதிர் தாக்குதல் நடத்த கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நோக்கி பாகிஸ்தான் ஏவுகணையை வீசியது.
நள்ளிரவு 1.10 மணி முதல் 1.20 மணிக்குள் பஞ்சாப்பை குறி வைத்து ஏவுகணையை வீசியது. பாகிஸ்தான் வீசிய ஏவு கணையை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு நடுவானில் இடைமறித்து அழித்தது. நடுவானில் தடுத்து அழிக்கப்பட்ட ஏவுகணையின் பாகங்கள் பஞ்சாப் மாநில எல்லையோரம் ஜதுவால் கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் கண்டுபிடிக்கப் பட்டது. பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல் முயற்சியை தொடர்ந்து பஞ்சாப் மாநிலம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.
அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. எல்லையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். பஞ்சாப் எல்லையில் ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று இரவு பாகிஸ்தான் விமானங்கள் அத்துமீறி இந்திய நிலைகளை குறிவைத்து வந்தன. இவற்றை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது.
அதுபோல, பாகிஸ்தானின் டிரோன்களையும் இந்தியா வானிலேயே தாக்கி அழித்தது. ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் குறிவைத்துள்ளதால் உச்ச கட்ட உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். மேலும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடனும் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து முப்படை அதிகாரிகளுடன் அவசரமாக முக்கிய ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தானுக்கு பெரிய அளவில் இந்தியா பதிலடி கொடுக்க கூடும் என்று சொல்லப்படும் நிலையில், பிரதமர் மோடி மிக முக்கிய ஆலோசனையை நடத்தியுள்ளார். அதன்படி பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் இந்தியா பதில் தாக்குதல் நடவடிக்கையினை தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications