அடுத்த சர்ச்சை.. "புதிய கூட்டுறவு கொள்கை.." 47 பேர் கொண்ட குழு அமைத்த மத்திய அரசு.. என்னன்னு பாருங்க
டெல்லி: சர்ச்சைக்குரிய தேசிய புதிய கல்விக் கொள்கை பாணியில் தேசிய புதிய கூட்டுறவுக் கொள்கையை செயல்படுத்த மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு தலைமையில் 47 உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு அமல்படுத்திய தேசிய புதிய கல்விக் கொள்கை பெரும் சர்ச்சையையும் எதிர்ப்பையும் எதிர்கொண்டிருக்கிறது. நாட்டின் பல மாநிலங்கள் இப்புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து வருகிறது. தமிழக அரசும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்க்கிறது.

டெல்லி மாநாடு
இந்நிலையில் தேசிய புதிய கூட்டுறவுக் கொள்கையை உருவாக்கும் முயற்சிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம், புதிய கூட்டுறவு கொள்கை குறித்த 2 நாள் தேசிய மாநாடு டெல்லியில் நடைபெற்றது. மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா மாநாட்டை தொடங்கி வைத்தார். அம்மாநாட்டில் 20-க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சகங்களின் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் தலைமைச் செயலாளர்கள், கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், கூட்டுறவு அமைப்புகளின் பதிவாளர் சுமார் 40 கூட்டுறவு அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய கூட்டுறவு கொள்கை
இதன் தொடர்ச்சியாக தேசிய அளவில் புதிய கூட்டுறவுக் கொள்கையை உருவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் 'சஹகர் சே சம்ரித்தி'யின் மூலம் கூட்டுறவுத்துறையை மேம்படுத்துவதற்காக புதிய தேசிய கூட்டுறவு கொள்கை உருவாக்கப்படுகிறது. இந்த தேசிய அளவிலான குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர் திரு சுரேஷ் பிரபாகர் பிரபு தலைமையில் நாடு முழுவதிலும் இருந்து 47 உறுப்பினர்கள் இடம் பெறுவர்.

கூட்டுறவு சங்கங்கள்
கடந்த 2002 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய கூட்டுறவுக் கொள்கையானது, கூட்டுறவுத்துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. இதன் விளைவாக, கூட்டுறவுத்துறையானது, தன்னாட்சி, சுயசார்பு மற்றும் ஜனநாயக ரீதியாக செயல்படுகிறது. தற்போது இந்தியா முழுவதும் சுமார் 8.5 லட்சம் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.

ஏன் புதிய கூட்டுறவு கொள்கை
இந்த சங்கங்களில் 29 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். இந்தக் கூட்டுறவு சங்கங்கள், வேளாண் துறை, பால் மற்றும் மீன் வளம், வீட்டுவசதி, நெசவு, கடன், சந்தைப்படுத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் கூட்டுறவுத்துறையை வலுப்படுத்தி, அனைத்து தளத்திலும் விரிவாக்கம் செய்வதற்காகவே, இந்த புதிய தேசிய கூட்டுறவுக் கொள்கை உருவாக்கப்படுகிறது. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications