ஒரே நாடு-ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம்: மோடியின் சுதந்திர தின உரைக்கு அமித்ஷா ஓஹோ பாராட்டு!
டெல்லி: நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் ஆற்றிய உரையில், ஒரே நாடு-ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், மருத்துவக் கல்வி விரிவாக்கம், தொழில்துறை உற்பத்தி மற்றும் 'இந்தியாவில் வடிவமைப்பு' மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் போன்றவற்றை வலியுறுத்தியதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை, வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பு என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "78-வதுசுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை, வளர்ந்த மற்றும் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் தற்சார்பு, ஒரே நாடு-ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், மருத்துவக் கல்வி விரிவாக்கம், தொழில்துறை உற்பத்தி மற்றும் 'இந்தியாவில் வடிவமைப்பு' மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் போன்ற கருப்பொருட்களை எடுத்துரைத்த மோடியின் உரை, கடந்த 10 ஆண்டுகளின் வெற்றிகளால் ஈர்க்கப்பட்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான அவரது உறுதிப்பாட்டை பிரதிபலித்தது. இந்த உரையைக் கேட்டு, வலிமையான இந்தியாவை உருவாக்க உறுதி ஏற்க வேண்டும் என்று நாட்டு மக்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். "
"பிரதமர் நரேந்திர மோடியின் உரை, அடிவானத்தில் ஒரு பிரகாசமான எதிர்காலத்தைப் பற்றிய பரந்த பார்வையை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அதை அடைய முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையின் சக்தியை இந்தியாவிற்கு ஏற்படுத்துகிறது. கடந்த 10 ஆண்டுகளில், பாடத்திட்டங்களை திருத்துவதன் மூலம் சுய மாற்றத்திற்கான பயணத்தை இந்தியா வகுத்துள்ளது. இது குடிமக்களால் இயக்கப்படும் நிர்வாகத்துடன் கூடிய புதிய இந்தியா. 140 கோடி குடிமக்களும் நிச்சயமாக மகத்துவம், செழிப்பு மற்றும் முன்னேற்றத்தை அடைய முடியும் என்று உறுதியாக நம்பும் புதிய இந்தியா இது என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தமது உரையில், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ், விளையாட்டுப் பொருட்களை உற்பத்தி செய்ய, இந்தியா தனது செழுமைவாய்ந்த பண்டைக்காலப் பாரம்பரியம் மற்றும் இலக்கியங்களை பின்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். விளையாட்டிற்கு பெரும் சந்தை வாய்ப்புகள் உருவாகி வருவதால், இத்துறையில் நாம் புதிய சிந்தனைகளை புகுத்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
"உள்நாட்டில் உருவாக்கப்பட்ட விளையாட்டுகளில் பங்கேற்க ஒவ்வொரு குழந்தையையும் நாம் ஈர்க்க வேண்டும், இந்திய குழந்தைகள், இளைஞர்கள், செயற்கை நுண்ணறிவு வல்லுநர்கள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களும், விளையாட்டு உலகிற்கு தலைமையேற்க வேண்டும் என நான் விரும்புகிறேன்- இது விளையாடுவதில் மட்டுமல்ல, மாறாக நமது விளையாட்டுப் பொருட்களை உலகம் முழுவதற்கும் கொண்டு செல்லவும் பாடுபட வேண்டும். அனிமேஷன் உலகிலும் நமது ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும்" என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார்.












Click it and Unblock the Notifications