நாளை லோக்சபாவில் தாக்கலாகிறது காஷ்மீர் சட்ட மசோதா!
டெல்லி: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்படுவதற்கான சட்ட மசோதாவுக்கு, ராஜ்யசபாவில் இன்று அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில் நாளை லோக்சபாவில் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களை உருவாக்குவது மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்குவது தொடர்பான சட்ட மசோதா இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவால், ராஜ்யசபாவில் தாக்கல் செய்யபட்டது.
இதன் மீதான விவாதங்கள் நடைபெற்ற பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. 125 உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்த நிலையில் 61 பேர் எதிர்த்து வாக்களித்தனர். எனவே இந்த சட்டம் நிறைவேறியது. இதையடுத்து இந்த சட்ட மசோதாவை அறிமுகம் செய்வதற்கு லோக்சபாவின் அனுமதியை கோரினார் அமித்ஷா.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி கைது
அப்போது அவர் பேசுகையில், நான் இந்த சட்ட மசோதாவை செவ்வாய்க்கிழமையான நாளை லோக்சபாவில் தாக்கல் செய்கிறேன். இதன் மீது விவாதத்திற்கு வாய்ப்பு அளிக்கப்படும். அதன் பிறகு நான் விவாதங்களுக்கு பதில் அளிக்க உள்ளேன். இவ்வாறு தெரிவித்தார்.