சட்டென விட்ட வார்த்தை.. ராகுல் காந்தியின் பேச்சு அபாண்டம்.. ஆவேசமான அமித்ஷா.. லோக்சபாவில் பரபரப்பு
டெல்லி: லோக்சபாவில் ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். ராகுல் காந்தியின் பேச்சு இந்துக்களை அவமதிக்கும் விதமாக இருப்பதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டி பேசினார். அதேபோல அமித்ஷாவும் ராகுல் காந்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி பேசத்தொடங்கியதில் இருந்து அனல் பறக்கும் விவாதம் நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 27ம் தேதி கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.இதையடுத்து, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் விவாதம் நடைபெற்றது. இதில், ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:- " ஊடகங்கள் வாயிலாக என் மீது தொடர் தாக்குதல் நடந்தது. அரசமைப்பு காப்பாற்றி வருகிறோம். பாஜக 24 மணி நேரமும் வெறுப்பை காட்டி வருகிறது" என்று ஆவேசமாக பேசினார்.

ராகுல் காந்தி பேசும் போது, பாஜக எம்பிக்கள் முழக்கமிட்டனர். வாழ்க அரசியல் சாசனம், பாரத் மாதா கி ஜே என பாஜக எம்பிக்கள் கோஷமிட்டனர். மேலும், ராகுல் காந்தி இந்து கடவுளான சிவன் படத்தைக் காட்டி உரையாற்றினார். இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மக்களவையில் சிவன் படத்தை காட்ட அனுமதி இல்லையா என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். மேலும், சிவன் கையில் இருக்கும் திரிசூலம் வன்முறைக்கானது இல்லை.. அகிம்சைக்கானது என்றும் ராகுல் கூறினார். மேலும், ராகுல் காந்தி பாஜகவை விமர்சித்து கடுமையாக பேசினார்.
ராகுல் காந்தி பேசும் போது குறுக்கிட்ட பிரதமர் மோடி, ராகுல் காந்தியின் பேச்சு ஒட்டு மொத்த இந்து சமூகத்தின் மீதான தாக்குதல். இந்துக்களை வன்முறையாளர்களாக காட்ட ராகுல் முயற்சிக்கிறார்" என்றார். தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், "இந்துக்களை அவமதித்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். ராகுல் காந்தியின் பேச்சு அபாண்டம் என்றும் கூறினார்.
ராகுல் காந்தி பேசிக்கொண்டு இருக்கும் போதே இவ்வாறு அமித்ஷா குறுக்கிட்டு பேசினார். கடந்த 10 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ள நிலையில், இன்று லோக்சபாவில் அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications